பதிவு செய்த நாள்
15 செப்2021
20:42
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனம், அதன் வரலாற்றில் முதன் முறையாக அதிகார மையத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது.
இந்நிறுவனத்துக்கு புதிதாக, தலைமை செயல் அதிகாரி பதவி ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.தற்போது டாடா குழுமத்தின்,‘ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் இருந்து வருகிறார். இவரது பதவிக் காலம் பிப்ரவரியுடன் முடிவடையும் நிலையில், மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், நிர்வாகத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், புதிதாக தலைமை செயல் அதிகாரி பதவி ஏற்படுத்தப்பட உள்ளது.இதன்படி, 153 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்நிறுவன வணிக செயல்பாடுகளை தலைமை செயல் அதிகாரி ஏற்று நடத்துவார்.
அதேசமயம், தலைமை செயல் அதிகாரியை பங்குதாரர்கள் சார்பாக, தலைவர் மேற்பார்வையிடுவார். இந்த திட்டம் குறித்து இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்பட வில்லை. இந்த திட்டத்தை, ‘டாடா டிரஸ்ட்’டின் தலைவர் ரத்தன் டாடா ஏற்றுக்கொள்வதை பொறுத்து, திட்டம் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.
டாடா சன்ஸ் தலைவர் பொறுப்புக்கு, ரத்தன் டாடாவுக்கு பிறகு வந்த சைரஸ் மிஸ்திரி உடனான பிரச்னைகளுக்கு பிறகு, நிறுவனம் இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த செய்தியை டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மறுத்துள்ளார். அதிகார மையத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவும் இத்தகைய செய்தியால் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். வளர்ச்சியுடன் செயல்படும் ஒரு குழுவிடம், இத்தகைய செய்திகள் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|