பதிவு செய்த நாள்
08 மே2022
23:09
தங்கம் விலை மாதிரி பெட்ரோல், டீசல் விலையை, நாடு முழுதும் மத்திய அரசு நிர்ணயித்தால் என்ன?
ஆர். பார்த்தசாரதி, சென்னை.
தங்கத்தின் அன்றாட விற்பனை விலையை மத்திய அரசு நிர்ணயிப்பதில்லை. இந்திய அளவில் அதை, ‘இந்தியன் புல்லியன் அண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேஷன்’ நிர்ணயம் செய்கிறது. தமிழக அளவில், ‘த ஜூவல்லர்ஸ் அண்டு டைமண்டு டிரேடர்ஸ் அசோசியேஷன் - மதராஸ்’ நிர்ணயம் செய்கிறது. பெருநகரங்களுக்கு இடையே கூட தங்கத்தின் விலையில் வித்தியாசம் உண்டு. ஒரு காலத்தில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம், அரசாங்கத்திடம் தான் இருந்தது. அப்போது ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக, 15 ஆண்டுகால ‘எண்ணெய் பத்திரங்கள்’ வெளியிடப்பட்டன. அந்த சுமையும் தற்போது நம் தலைமீது வந்து இறங்குகிறது. இந்த தொல்லையே வேண்டாம் என்று தான், 2010க்குப் பின், விலை நிர்ணயம் செய்வதை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவது மட்டுமே.
வாடகைதாரர் வீட்டை காலி செய்த பின், மீண்டும் பதிவாளர் அலுவலகம் சென்று, ஏற்கனவே செய்யப்பட்ட வாடகை ஒப்பந்த பதிவை ரத்து செய்ய வேண்டுமா? இல்லை, வாடகைதாரர் காலி செய்ததுமே, இப்பதிவு தானாகவே ரத்து ஆகிவிடுமா?
மு.சி.சம்பந்தம், சென்னை.
அதற்கு முன்னர், வாடகை ஆணையத்திடம் விபரம் தெரிவிக்க வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே, வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள், வாடகைதாரர், வீட்டு உரிமையாளர் இருவரும் ஒப்புக்கொண்ட ஷரத்துகளுடன் கூடிய, புதிய ஒப்பந்தத்தை போட்டுக்கொள்ள வேண்டும்.அல்லது, ஒப்பந்தம் காலாவதி ஆகப் போகிறது என்பதை வாடகை ஆணையத்திடம், காலாவதி ஆவதற்கு 15 நாட்களுக்கு முன்னரே உரிய படிவத்தை நிரப்பி, தெரிவிக்க வேண்டும். பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டுமா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவு எடுக்கவும்.
பல்வேறு காரணங்களினால், எல்.ஐ.சி.,யின் ஐ.பி.ஓ.,வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. சந்தையில் பட்டியல் இடப்பட்டவுடன், இதை வாங்கிக்கொள்ளலாமா?
ஜி.சவுந்தரராஜன், ஆவடி.
தாராளமாக. எல்லா விமர்சனங்களையும் தாண்டி, எல்.ஐ.சி., தரமான நிறுவனம். மக்கள் மத்தியில், காப்பீடு பற்றிய புரிதல் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், பெரும்பாலோர் எல்.ஐ.சி., பாலிசிகளையே எடுப்பர். காரணம், எல்.ஐ.சி., முகவர்களின் விரிந்த பரந்த சேவை. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில், எல்.ஐ.சி.,யின் வருவாயும் லாபமும் உயரவே செய்யும். நிப்டி 50 பட்டியலிலும், சென்செக்ஸ் 30 பங்குகளின் பட்டியலிலும், எல்.ஐ.சி., இடம்பெறும் போது, இதன் மீதான ஈர்ப்பு மேலும் உயரும். சந்தையில் பட்டியல் இடப்பட்டவுடன் கொஞ்சம் சரிவு இருக்கலாம். ஆனால், வரும் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி மேம்படும் என்பதால், செகண்டரி மார்க்கெட்டில், எல்.ஐ.சி., பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம்.
வங்கி வட்டித் தொகையை நம்பி வாழ்பவர்களுக்கு, மியூச்சுவல் பண்டு முதலீடு பாதுகாப்பானதா? அதில் வரும் தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு வருமானவரி உண்டா?
சீனு.சந்திரா, மயிலாப்பூர்.
உங்களுக்கு இப்படிச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செய்கிறேன். பெயர் தெரியாத லோக்கல் பண்டு நிறுவனங்கள், சீட்டுத் திட்டங்கள், எம்.எல்.எம்., திட்டங்கள், கிரிப்டோகரன்சி சூதாட்டங்கள் போன்றவற்றை விட, மியூச்சுவல் பண்டு திட்டங்கள் பாதுகாப்பானவை. நீங்கள் 5 முதல் 5.5 சதவீத வட்டியே போதும் என்று கருதுவீர்களானால், பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளே உங்களுக்கு போதுமானவை. வருமான வரி செலுத்திய பின்னர், குறைந்தபட்சம் 10 சதவீத வருமானமேனும் நிற்கவேண்டும் என்று நினைத்தால், மியூச்சுவல் பண்டுகள் உகந்தவை. மியூச்சுவல் பண்டில் ரிஸ்க் உண்டா? உண்டு. மேலே பட்டியலிட்ட அபாயகரமான முதலீடுகளைவிட, இதில் ரிஸ்க் கொஞ்சம் குறைவு. வருமான வரி என்பது, மியூச்சுவல் பண்டில் நீங்கள் ஈட்டும் வருவாயைப் பொறுத்தது. உங்களுடைய வயதுக்கு ஏற்ப, வருமான வரி விலக்கு கிடைக்கும்.
ஆர்.பி.ஐ., கவர்னர் திடீரென்று வட்டியை உயர்த்திவிட்டாரே? ஏன் இந்த அவசரம்?
எஸ். ப்ரீதசக்ரன், கொட்டையூர்.
கடந்த பணக் கொள்கை குழு சந்திப்பின்போதே, வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்க வேண்டும் என்று பல பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் விரைவில் வெளிவர இருக்கிறது. இது, மார்ச் விகிதத்தை விட அதிகமாகவே இருக்கக்கூடும். அதாவது, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைஏற்றத்தால், நம் அன்றாட வாழ்க்கைத் தேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. ஏழை, எளியவர்கள் மட்டுமல்ல, மாதச் சம்பளக்காரர்கள் கூட தடுமாற ஆரம்பித்துவிட்டனர். பல சிறு ஹோட்டல்கள், கடைகள், தொழில்கள் காணாமல் போய்விட்டன. வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பதைவிட, பணவீக்கத்தைக் குறைக்க வேண்டியது ஆர்.பி.ஐ.,யின் முதன்மையான பணியாக மாறிவிட்டது. அதனால் தான், அவசர அவசரமாக 0.40 சதவீத வட்டியை உயர்த்தினார் ஆர்.பி.ஐ., கவர்னர். இது போதாது. இந்த ஆண்டுக்குள், 2 சதவீத அளவுக்கேனும் வட்டி உயர்த்தப்படும்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத் தேக்கநிலை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதே? இந்தியாவிலும் இது எதிரொலிக்குமா?
வி. சவரிராஜ், செங்கல்பட்டு.
சொல்ல முடியாது. எதிரொலிக்காமலும் போகலாம். இப்படி புரிந்துகொள்ளுங்கள். அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை பற்றிய கணிப்புகளை எப்போதும் ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். தேக்கநிலையைச் சமாளிக்க, பல்வேறு நாடுகள் என்ன முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதெல்லாம் நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள். ஆனால், நம் வீட்டுப் பொருளாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியும்; அது நம் கையில் தான் இருக்கிறது. சிக்கனமாக, வரவுக்குள் செலவு செய்துகொண்டு வாழப் பழகுங்கள். அகலக்கால் வேண்டாம்.
விழாவில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், அதிமுகவின் சதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|