பதிவு செய்த நாள்
18 மே2022
01:56
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு மாறாக, 8 சதவீத தள்ளுபடியில் அறிமுகம் ஆனது.நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது.இந்த பங்கு வெளியீட்டுக்கு, முதலீட்டாளர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
மூன்று மடங்கு விண்ணப்பங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து வரப்பெற்றன.இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மத்திய அரசு பங்கின் வெளியீட்டு விலையை 949 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்திருந்தது.ஆனால், வர்த்தகத்தில் பங்குகள் விலை சரிவை சந்தித்தன.இந்நிறுவன பங்கின் வெளியீட்டு விலை 949 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று மும்பை பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 872 ரூபாயாகவும், தேசிய பங்குச் சந்தையில் 867.20 ரூபாயாகவும் குறைந்துவிட்டது.
பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றம் கண்டபோதிலும், எல்.ஐ.சி., பங்குகள் தள்ளுபடி விலையில் வர்த்தகமாகின.இது குறித்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத் துறை செயலர் துஹின் காந்த பாண்டே கூறியதாவது:கணிக்க முடியாத பங்குச் சந்தைகளின் சூழல், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் பலகீனமான நிலையில் அறிமுகம் ஆக காரணம் ஆகிவிட்டது. முதலீட்டாளர்கள் நீண்டகால லாபத்துக்காக பங்குகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பங்குச் சந்தை நிபுணர்களும், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், நீண்டகாலத்தில் நல்ல லாபம் தரக்கூடும் என்பதால், அதை, முதலீட்டாளர்கள் தங்கள் வசமே வைத்திருப்பது நலம் பயக்கும் என தெரிவித்துள்ளனர்.எல்.ஐ.சி., பங்குகள் விலை நிச்சயம் அதிகரிக்கும். இன்னும் நிறைய முதலீட்டாளர்கள், குறிப்பாக பங்கு வெளியீட்டின்போது வாய்ப்பை தவற விட்ட பாலிசிதாரர்கள், இப்பங்குகளை நிச்சயம் வாங்குவர்.
எம்.ஆர்.குமார்,தலைவர், எல்.ஐ.சி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|