பதிவு செய்த நாள்
09 மார்2011
01:28
மும்பை:வரும் 2011 - 12ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இரும்பு தாது ஏற்றுமதி மீதான வரி, 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உள் நாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் இரும்பு தாது கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஒரு டன் உருக்கு பொருள்கள் விலை, 1,000 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள் நாட்டில் உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், மூலப் பொருள்களின் விலை உயர்வால், உருக்கு பொருள்களின் விலையை உயர்த்தின. குறிப்பாக, சிறப்பு வகை நிலக்கரியின் விலை, மிகவும் அதிகரித்திருந்தது. இச்சூழ்நிலையில், மத்திய அரசு, இரும்பு தாது ஏற்றுமதி மீதான வரியை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், இதன் ஏற்றுமதி குறைந்து, உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் இரும்புத் தாது கிடைக்கும் என, உருக்கு துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.அண்மையில், ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல், நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சாஜன் ஜிந்தால் கூறுகையில், 'சிறப்பு வகை நிலக்கரி மற்றும் இரும்பு தாதுவின் விலை உயர்ந்திருந்தது. இதனால், இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இருப்பினும், தற்போதைய நிலையில், உருக்கு பொருள்களின் விலையை உயர்த்தினால், அது தேவையை குறைத்து, இதன் விலையை சரிவடையச் செய்யும்' என்று தெரிவித்திருந்தார்.தற்போதைய நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பு துறைகளில் உருக்கு பொருள்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது. இதனடிப்படையில், உருக்கு பொருள்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தினாலும், அது குறைந்த அளவிற்கு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, இரும்பு தாது ஏற்றுமதி மீதான வரியை உயர்த்தியுள்ளதால், இனி உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் இரும்பு தாது கிடைக்கும். எனவே, அடுத்த 2 - 3 மாதங்களில், உருக்கு பொருள்களின் விலை, டன்னுக்கு 1,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என, ஜிந்தால் மேலும் குறிப்பிட்டார். உருக்கு பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், டாட்டா ஸ்டீல், செயில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் எஸ்.ஆர். ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள், கடந்த இரண்டு மாதங்களில், உருக்கு பொருள்களின் விலையை, டன்னுக்கு 2,000 ரூபாய் வரை உயர்த்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், சென்ற பிப்ரவரி மாதத்தில், 5 லட்சத்து 41 ஆயிரம் டன் உருக்கு பொருள்களை உற்பத்தி செய்திருந்தது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட 8 சதவீதம் (5 லட்சத்து 2 ஆயிரம் டன்) அதிகமாகும்.இந்நிறுவனம், சென்ற பிப்ரவரி மாதத்தில், 4 லட்சத்து 42 ஆயிரம் டன், உருக்கு தகடுகளை உற்பத்தி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட 48 சதவீதம் (3 லட்சம் டன்) அதிகமாகும். அதே சமயம், இந்நிறுவனம் இதே மாதங்களில், கம்பிகள் உள்ளிட்ட நீள்வகை உருக்கு பொருள்கள் தயாரிப்பு, 22 சதவீதம் சரிவடைந்து, அதாவது, 96 ஆயிரம் டன் என்ற அளவிலிருந்து 75 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருள்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய நிறுவனமாக, ஜே.எஸ்.டபிள்யூ திகழ்கிறது. இந்நிறுவனம், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, அதன் உருக்கு பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|