பதிவு செய்த நாள்
09 மார்2011
23:59
புதுடில்லி: நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நாட்டின் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 104 கோடி டாலராக (4,784 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட ஒரு சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், அன்னிய நேரடி முதலீடு குறைந்து போயுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 204 கோடி டாலராக (9,384 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, சென்ற ஆண்டை காட்டிலும், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், இந்த முதலீடு 48 சதவீதம் சரிவடைந்துள்ளது.மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், இந்தியாவில் அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்கின்றன.நடப்பு 2010-11ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு 25 சதவீதம் சரிவடைந்து 1,700 கோடி டாலராக (78,200 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 2,290 கோடி டாலராக (ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 340 கோடி ரூபாய்) இருந்தது.கடந்த 2009-10ம் நிதியாண்டிலும், அன்னிய நேரடி முதலீடு குறைந்திருந்தது. இவ்வாண்டில், இந்த முதலீடு 2,588 கோடி டாலராக (ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 48 கோடி ரூபாய்) குறைந்திருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 2,733 கோடி டாலராக (ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 718 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.சென்ற 2010ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து குறைந்திருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில், இந்த முதலீடு சற்று அதிகரித்து இருந்தது. அதாவது, சென்ற டிசம்பர் மாதத்தில், இந்த முதலீடு முந்தைய ஆண்டின் ஜனவரி மாதத்தை விட 31 சதவீதம் வளர்ச்சி கண்டு 200 கோடி டாலராக (9,200 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. அதேசமயம், சென்ற 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு 40 சதவீதம் குறைந்து 140 கோடி டாலராகவும் (6,440 கோடி ரூபாய்), நவம்பர் மாதத்தில் 7 சதவீதம் குறைந்து 160 கோடி டாலராகவும் (7,360 கோடி ரூபாய்) இருந்தது.அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இதற்கான காரணத்தை கண்டறிவதற்காக, குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பதற்கான, வழிமுறைகளை அளிக்கும்.தற்போதைய நிலையில், தொலைதொடர்பு, வீட்டு வசதி, ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் தான், அதிகளவு அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.சென்ற ஜனவரி மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடும் குறைந்து காணப்பட்டது. அம்மாதத்தில், இவற்றின் முதலீடுகள் 119 கோடி டாலராக (5,474 கோடி ரூபாய்) குறைந்திருந்தது. இது, கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 184 கோடி டாலராக (8,464 கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|