பதிவு செய்த நாள்
11 மார்2011
00:18
புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்து வருகிறது. இதை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூல் 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், வசூலான தொகையை விட 20.86 சதவீதம் அதிகம்.இது, வரும் 2011-12ம் நிதியாண்டிற்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ள, நேரடி வரி வசூல் இலக்கான, 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயில் 75.34 சதவீதம்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நிறுவன வரி வசூல் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 24.44 சதவீதம் (1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகம். இதே 11 மாத காலத்தில், தனிநபர் வருமான வரி வசூல் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 14.29 சதவீதம் (98 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகம்.இதே காலத்தில், பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 6,078 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட 1.72 சதவீதம் (5,975 கோடி ரூபாய்) அதிகம்.சென்ற பிப்ரவரியில் மட்டும், நிறுவன வரி வசூல் 6,740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வசூலான தொகையை விட 3.4 சதவீதம் (6,519 கோடி ரூபாய்) அதிகம். சென்ற பிப்ரவரில், தனிநபர் வருமான வரி வசூல் 11 ஆயிரத்து 923 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வசூலான தொகையை விட 46.63 சதவீதம் (8,131 கோடி ரூபாய்) அதிகம். நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல் வாயிலாக, முதலில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்து. தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீத அளவிற்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், நேரடி வரி வசூல் இலக்கு மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தி, 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி திரட்டும் வகையில் மறு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|