பதிவு செய்த நாள்
11 மார்2011
12:46
இந்தியாவில் மோட்டார் சைக்கிள் புரட்சி ஏற்படுவதற்கு முன், 1980ம் ஆண்டுகளின் காலகட்டத்தில், ஸ்கூட்டர்கள் தான் அதிகளவில் விற்பனையாகின. இதில் பஜாஜ் ஸ்கூட்டர் தான் முன்னணியில் இருந்து வந்தது. 'ஹமாரா பஜாஜ்' என்ற வாசகம் பிரபலமானது. பஜாஜ் நிறுவனத்தின் சேட்டக் ஸ்கூட்டர் வைத்திருப்பதை, ஒரு பெருமைக்குரிய விஷயமாகவே பலரும் கருதினர். ஆனால், இதன் பிறகு, இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்தது. இதனால், ஸ்கூட்டர் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 2009 - 10ம் நிதியாண்டின் இறுதியில் இருந்து ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி கொண்டது, பஜாஜ் நிறுவனம். மோட்டார் சைக்கிள் விற்பனையில் தீவிர கவனம் செலுத்தியது. டிஸ்கவர், பல்ஸர் போன்ற மோட்டார் சைக்கிள்கள் விற்பனை மூலம், இந்த சந்தையின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. எனினும், பஜாஜ் நிறுவனம் வெளியேறிய பிறகு, இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் விற்பனை சக்கை போடு போடுகிறது. ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையின் மூலம், இந்த சந்தையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முன்னணியில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், இந்திய ஸ்கூட்டர் சந்தையில், 16 லட்சத்து 97 ஆயிரத்து 204 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான ஸ்கூட்டர்களை விட, 46.57 சதவீதம் அதிகம். இந்த சூழ்நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது, ஸ்கூட்டர் உற்பத்தியில் மீண்டும் இறங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். ஆனால், இதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவர் டில்லியில் அளித்த பேட்டியில்,' நாங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். தொடர்ந்து மோட்டார் சைக்கிள் விஷயத்தில் தான் கவனம் செலுத்துவோம்' என்றார். அவர் மேலும் கூறுகையில்,' உலக மோட்டார் சைக்கிள் சந்தையில் ஆண்டுக்கு 3.5 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகின்றன. இதில் எங்களின் பங்களிப்பு 35 லட்சம் மோட்டார் சைக்கிள்களாகும். சந்தையில் 10 சதவீத இடத்தை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.தொடர்ந்து அதில் முன்னேற்றம் காண்போம்' என்றார். ஸ்கூட்டர் உற்பத்தியை நிறுத்தியது ஏன் என்று ராஜிவ் பஜாஜிடம் கேட்டபோது,' உற்பத்தியை நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால், மக்கள் ஸ்கூட்டர் வாங்குவதை நிறுத்தி விட்டனர்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|