பதிவு செய்த நாள்
14 மார்2011
12:28
புதுடில்லி : இந்தியாவின் பொதுத் துறையைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அடுத்த பத்து ஆண்டுகளில் 110 புதிய கப்பல்களை வாங்கும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். இதற்கான செலவினம் ரூ.27,668 கோடியாக இருக்கும். நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) 62 புதிய கப்பல்களை வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து கப்பல்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன. மற்ற கப்பல்களுக்கான கட்டுமான பணிகள் இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் மட்டும் 26 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்க உள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது 78 கப்பல்களை கொண்டுள்ளது. இவையனைத்துமாக 56.10 லட்சம் டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவையாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனம் கையாண்ட சரக்குகளின் அளவு 2.30 கோடி டன்னாகும். இந்தியாவில், சரக்குக் கப்பல் போக்குவரத்து மற்றும் அத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் சுமார் 200 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அடங்கும். நாட்டின் சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஜி.இ. ஷிப்பிங், எஸ்ஸார் ஷிப்பிங் போர்ட்ஸ், வருண் ஷிப்பிங், சன்மார் ஷிப்பிங், திரிவேணி ஷிப்பிங் சர்வீசஸ் ஆகியவை முன்னிலை வகித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|