பதிவு செய்த நாள்
20 மார்2011
01:03
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில், ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி, இந்நிறுவனம், சென்ற வெள்ளிக்கிழமையன்று பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி'க்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனத்தின் இப்பங்கு வெளியீட்டிற்கு, சென்ற மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான முக்கிய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு, இந்நிறுவனம் முதல் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.அப்போது, மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டிருந்த மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை வெளியிட்டது. அதன்பிறகு, மத்திய அரசின் பங்கு மூலதனம் 89.78 சதவீதமாக குறைந்துள்ளது.இரண்டாவது பங்கு வெளியீட்டில், புதிதாக 15 சதவீத பங்குகளும், மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5 சதவீத பங்குகளும் வெளியிடப்பட உள்ளன.வெளியிடப்படவுள்ள மொத்த, 17.21 கோடி பங்குகளில், 5.74 கோடி பங்குகள், அரசின் தரப்பிலிருந்து வெளியிடப்படவுள்ளது. ஆக, இப்பங்கு வெளியீட்டின் மூலம், மொத்தம் 6,000 கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனின், இந்த இரண்டாவது பங்கு வெளியீடு, வரும் 2011-12ம் நிதியாண்டின், மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பை, வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை அறிவிக்கும் போது, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.வரும் நிதியாண்டில், பொதுத்துறை பங்கு வெளியீட்டில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடே முதலாவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|