பதிவு செய்த நாள்
20 மார்2011
01:03
மும்பை:நாப்தாவின் விலை தற்போது குறைந்துள்ளதால், பாலிமரின் விலையும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோ ரசாயனத் துறையில் நாப்தாவின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால், பாலிமர்களின் விலையும் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால், அந்நாட்டில் நாப்தா பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரத்தில் 1 டன் நாப்தாவின் விலை, 1,000 டாலர் என்றளவில் இருந்தது. இது, தற்போது 880 - 890 டாலராக சரிவடைந்துள்ளது. இதனால், பாலிமர்களின் விலை, குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நாப்தாவை கொண்டு பாலித்திலீன், பாலிபுரொப்பலீன் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள், பாலி புரொப்பலீனின் (பி.பி.,) விலை, 1 கிலோ 97 ரூபாய் என்றளவில் இருந்தது. இதை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹால்டியா பெட்ரோல் கெமிக்கல்ஸ், காஸ் ஆத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், தயாரித்து வருகின்றன. நாப்தாவின் விலை உயர்வால், இந்நிறுவனங்கள் இவற்றின் விலையை உயர்த்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.பாலிபுரொப்பலீன், அதிக உறுதித்தன்மை கொண்ட உரம் மற்றும் சிமென்ட் சாக்குகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.உலகளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக, நாப்தாவை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ளும் நாடாக ஜப்பான் உள்ளது.தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால், நாப்தா இறக்குமதியை அந்நாடு, வெகுவாக குறைத்து கொண்டுள்ளது. பொதுவாக, நாப்தாவின் விலை, கச்சா எண்ணெயின் விலையை விட, ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது.இந்நிலையில், ஜப்பான் நாடு, அதன் மொத்த சுத்திகரிப்பு ஆலைகளில், 29 சதவீத ஆலைகளை தற்காலிகமாக மூடிவைத்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலை, ஆசிய சந்தைகளில் குறைந்து போயுள்ளது.பெட்ரோ ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கெயில் இந்தியா, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி கொள்கிறது. அதேசமயம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், நாப்தாவை எரிபொருளாக பயன்படுத்தி கொள்கிறது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், நாப்தா மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் எரிப்பொருளாக பயன்படுத்தி கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.நாப்தாவின் விலை குறைந்துள்ளதால், பாலிமர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், தற்போதைக்கு இவற்றின் விலையை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலை உயரும் நிலையில், இந்நிறுவனங்கள், பாலிமர்களின் விலையை மீண்டும் உயர்த்தக்கூடும்.நடப்பு 2011ம் ஆண்டில், ஜனவரி முதல் இதுவரையிலுமாக பெட்ரோ ரசாயன தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு முறை இவற்றின் விலையை உயர்த்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|