பதிவு செய்த நாள்
25 மார்2011
00:26
புதுடில்லி: நடப்பு 2010 - 11ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 3,600 கோடி டாலராக (1லட்சத்து 65 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 41 சதவீதம் (2,550 கோடி டாலர் - 1லட்சத்து 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் இவற்றின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 51 சதவீதம் அதிகரித்து, 440 கோடி டாலராக (20 ஆயிரத்து 240 கோடிரூபாய்) உயர்ந்துள்ளது. இவ்வாண்டு, ஜனவரி மாதத்திலும், இவற்றின் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் ஜனவரி மாதத்தை விட, 22 சதவீதம் அதிகரித்து, 286 கோடி டாலராக (13 ஆயிரத்து 156 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. அண்மையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், அந்நாடு மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், அந்நாட்டிற்கான நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜப்பான் அரசு, சுனாமியால் ஏற்பட்ட இடர்பாடுகளை திறமையாக கையாண்டு வருகிறது. இதனால், கூடிய விரைவில், அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலிருந்து, ஜப்பான் நாட்டிற்கான நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, அடுத்த ஒரு சில மாதங்களுக்கு குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாடு, இந்தியாவிலிருந்து பட்டை தீட்டப்பட்ட வைரங்களையே அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், அந்நாடு, இந்தியாவிலிருந்து பட்டை தீட்டப்பட்ட வைரங்களை 3.31 கோடி டாலருக்கு (152 கோடி ரூபாய்) இறக்குமதி செய்து கொண்டது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 46.2 சதவீதம் அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சிலின் தலைவர் ராஜீவ் ஜெயின் தெரிவித்தார்.நடப்பு முழு நிதியாண்டில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 17.8 சதவீதம் அதிகரித்து 3,300 கோடி டாலராக (1 லட்சத்து 51 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, இந்த கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது.நாட்டின் மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய குடியரசு நாடுகளின் பங்களிப்பு 60 சதவீத அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஜனவரி மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட இவற்றின் ஏற்றுமதியில், அறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 23.44 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது. தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 15.38 சதவீத பங்களிப்பையும், வண்ண நவரத்தினங்களின் பங்களிப்பு, 3.8 சதவீத அளவிற்கும் இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், மேற்கத்திய நாடுகளுக்கான நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி வெகுவாக குறைந்து போயிருந்தது. தற்போது, பல நாடுகளின் பொருளாதாரம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், இவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.முன்பு மேற்கத்திய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்து போனதையடுத்து, இந்திய ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்கள், தென் அமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைகளுக்கு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கினர் என, இந்த கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|