பதிவு செய்த நாள்
25 மார்2011
00:26
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையன்றும், சிறப்பாக இருந்தது. ஜப்பான் தவிர, அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது.மதியம் வரை பல நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நாட்டின் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், கடந்த சில வாரங்களுக்கு பிறகு, மீண்டும் இரண்டு இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது என்ற செய்தியால், வர்த்தகத்தில் சிறிது தேக்கநிலை ஏற்பட்டது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், வங்கி, உலோகம், பொறியியல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அதே சமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 144.58 புள்ளிகள் அதிகரித்து, 18,350.74 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,373.97 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,269.32 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையிலும், வர்த்தகம் நன்கு இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 42.15 புள்ளிகள் உயர்ந்து, 5,522.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,529 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,496.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|