பதிவு செய்த நாள்
26 மார்2011
00:02
- திருமை. பா. ஸ்ரீதரன் - முன்பேர வர்த்தகம் வெளிப்படையாக உள்ளதால், பொருள்களை வாங்குவது அல்லது விற்கும் நடவடிக்கைளில் ஈடுபடுவோருக்கு நிச்சயத்தன்மை கிடைக்கிறது. மேலும், அப்பொருளின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து, அச்சப்படாமல் அவர்கள், இதர பணிகளில் செயல்பட முடிகிறது. இதனால், அவர்களுடைய பொன்னான காலமும், நேரமும் மிச்சமாகிறது. முன்பேர வர்த்தகத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்குள்ள தேவை, அளிப்பு, விலை விவரங்கள் போன்றவை உடனுக்குடன் தெரிய வருவதால், உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி பொருள்களின் விலை குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது. முன்பேர வர்த்தகத்தில், வர்த்தகம் மேற்கொள்ளும் அளவிற்கு விளைபொருள்கள் பிணையமாக வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக, இத்துறைக்கான கட்டுப்பாடு ஆணையம், 'பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன்' கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, அவ்வப்போது அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தை, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தையின் வணிக மதிப்பு, 50 மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளது. நம் நாட்டில் தற்போது, எண்ணெய் வித்துகள், மிளகு, மஞ்சள், சர்க்கரை, வெல்லம், உருளைக்கிழங்கு, பருத்தி, குறிப்பிட்ட உணவு தானியங்கள், தங்கம், வெள்ளி என, 60க்கும் மேற்பட்ட பொருள்கள், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்பொருள்கள் மீதான வர்த்தகம், ஒருங்கிணைக்கப்பட்டு கம்ப்யூட்டர்கள் வாயிலாக (ஆன்லைன்) நடைபெறுகிறது. எம்.சி.எக்ஸ். எனப்படும் 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்' நிறுவனத்தின் முன்பேர வர்த்தகத்தில், பல்வேறு விளைபொருள்கள் மீது வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும், நடப்பாண்டில் இந்நிறுவனத்தில் தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற ஒரு சில பொருள்களின் மீது அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதால், இந்நிறுவனத்தின் வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எம்.சி.எக்ஸ். நிறுவனம், அண்மையில், விமான எரிபொருள் மீதும் முன்பேர வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.இதையடுத்து, என்.சி.டீ.எக்ஸ். எனப்படும், 'நேஷனல் கமாடிட்டீஸ் அண்டு டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்' நிறுவனத்தின் முன்பேர வர்த்தகத்தில், சோயா எண்ணெய், வெல்லம் மற்றும் சோயாபீன் ஆகிய விளைபொருள்கள் மீது அதிகளவில் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில், இவற்றின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. என்.எம்.சி.இ. என்று சுருக்கமாக அழைக்கப்படும், 'நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் ஆப் இந்தியா' நிறுவனத்தில், மிளகு, கச்சா சணல் ஆகியவற்றின் மீது மிக அதிகளவில் முன்பேர வர்த்தகம் நடைபெறுகிறது.விவசாயிகள், தங்களுடைய விளைபொருள்களை, முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட (அனுமதிக்கப்பட்ட), சேமிப்பு கிடங்கு வசதியை கொண்டுள்ள நிறுவனங்களிடம் இருப்பு வைக்கலாம். விவசாயிகள் அளிக்கும் தானியங்கள் உள்ளிட்ட விளை பொருள்களின் அளவு மற்றும் தரம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு, அதற்கேற்ப, 'வேர் ஹவுஸ் ரிசிப்ட்' எனப்படும் ரசீதை, அந்த சேமிப்பு கிடங்கு நிறுவனம் அளிக்கும். இந்நிறுவனங்கள் அளிக்கும் இந்த வேர்ஹவுஸ் ரசீதுகள் மீதும், முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|