பதிவு செய்த நாள்
27 மார்2011
11:34
திருச்சி: திருச்சியில் அக்னி நட்சத்திர வெயிலை போல தற்போதே வெயில் கொளுத்த துவங்கியுள்ள நிலையில், குளிர்ச்சியான பச்சை மூங்கில் தட்டிகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. புல் வகையை சேர்ந்த தாவர வகையான மூங்கிலுக்கு இயற்கையிலேயே குளிர்ச்சியான தன்மை உண்டு. குறிப்பாக ஆறுகள், தண்ணீர் வசதி அதிகமுள்ள இடங்களில் வெட்டப்படும் பச்சை மூங்கில்கள் அதிக குளிர்ச்சி தன்மையை கொண்டிருக்கும். பச்சை மூங்கில் மூலம் செய்யப்படும் தட்டிகளை, வெயில், உஷ்ண காற்று உள்ளே புகும் ஜன்னல், திண்ணை பகுதிகளில் வாங்கி வைத்தால், தட்டியின் ஊடே புகுந்து வரும் மூங்கில் வாசம் வீசும் குளிர்ச்சியை ஹாயாக அனுபவிக்கலாம். தட்டிகள் செய்வதற்கு, பச்சை மூங்கில் முதலில் சிறிய குச்சிகளாக வெட்டப்படுகிறது. மெல்லியதாக சீவி, கீற்றாக வகுக்கப்படுகிறது. அவற்றை கொண்டு கைகளாலோ அல்லது தறிபோல ஒன்றன் மீது ஒன்றாக வைத்தோ பின்னப்படுகிறது. மூங்கில் தட்டிகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள திருச்சி தென்னூரை சேர்ந்த ஆறுமுகம் (55), செல்வி (47) தம்பதியினர் கூறியதாவது: நாங்கள் இந்த தொழிலில் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்கப்படும் மூங்கிலை வாங்கி வந்து தட்டிகள் செய்கிறோம். மூங்கில் தட்டியை பொறுத்தவரை நீள, அகலத்தை பொறுத்து விற்கிறோம். அதாவது, ஆறு அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட தட்டியை 400 ரூபாய்க்கு விற்கிறோம். இதை செய்வதற்கு எங்கள் இருவருக்கும் ஒருநாள் ஆகும். கைப்பின்னல் தட்டியும் தயாரித்து விற்கிறோம். சைஸூக்கு தகுந்தாற்போல் விலையில் வித்தியாசம் இருக்கும். பெரிய தொழில்நிறுவனங்கள், மூங்கில் தட்டியை விரும்பி வாங்குகின்றனர். அதில் வித்தியாசமாக பெயின்ட் அடித்து, ஜன்னல் போன்ற பகுதிகளில் அழகாக வைத்து கொள்கின்றனர். ஒருகாலத்தில் ஆர்டர் கொடுத்து தட்டிகள் வாங்கி சென்றனர். தற்போது கண்ணாடிகள் பதிப்பது மாடர்னாகி வருவதால், மூங்கில் தட்டிகளுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. எங்களுக்கு ஒருநாள் வருமானம் வந்தாலும் வரும். வராமல் போனாலும் போனதுதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|