பதிவு செய்த நாள்
28 மார்2011
00:13
ஐதராபாத்: இந்திய விமான நிலையங்கள் ஆணையம், வரும் 2012ம் ஆண்டில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதன சந்தையில் களம் இறங்க இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் வி.பி.அகர்வால் தெரிவித்தார்.ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது அகர்வால் கூறியதாவது:இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.), நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் பராமரித்து, நிர்வகித்து வருகிறது. பல விமான நிலையங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருவதுடன், விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகளவில் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ள நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட உள்ளது. தற்போது, ஏ.ஏ.ஐ. நிறுவனம், சென்னை, கோல்கட்டா ஆகிய, இரண்டு பெரிய விமான நிலையங்களை மேம்படுத்தி வருகிறது. இவைதவிர, சிறிய நகரங்களில் உள்ள 35 விமான நிலையங்களில், பல்வேறு கட்டமைப்பு திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் சராசரியாக, 400 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நடுத்தர நகரங்களில் உள்ள விமான நிலையங்களையும் மேம்படுத்தி தர முடிவு செய்துள்ளது.இத்திட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த விமான நிலையங்களின் பயணிகள் கையாளும் திறன், தற்போதைய நிலையை விட, 6 அல்லது 8 மடங்கு அதிகரிக்கும்.ஏ.ஏ.ஐ. நிறுவனம், அதன் சொத்து மதிப்பு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால், கே.பி.எம்.ஜி. நிறுவனம், ஏ.ஏ.ஐ. நிறுவனத்தின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தான் உள்ளது என தெரிவித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் அதிகளவில் வித்தியாசம் உள்ளதால், மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளது. இந்த மறுமதிப்பீட்டிற்கு பிறகு, புதிய பங்கு வெளியீட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அகர்வால் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|