பதிவு செய்த நாள்
30 மார்2011
02:54
புதுடில்லி:நடப்பு 2010-11ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடுகள் வாயிலாக, 46 ஆயிரத்து 267 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.நடப்பு நிதியாண்டு நிறைவடையும் நிலையும் நிலையில், இவ்வாண்டில் இந்திய நிறுவனங்கள் மூலதன சந்தையிலிருந்து 46 ஆயிரத்து 267 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால், திரட்டப்பட்ட தொகை 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிதியாண்டின், கடைசி காலாண்டில், நாட்டின் பங்கு வர்த்தகத்தில், ஏற்பட்ட சுணக்க நிலையால், பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்தி போட்டன. இல்லாவிடில், இவ்வாண்டில், மூலதனச் சந்தையிலிருந்து மேலும் அதிக தொகை திரட்டப்பட்டிருக்கும் என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.மேற்கொள்ளப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டு தொகையில், 27 ஆயிரத்து 537 கோடி ரூபாய் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் திரட்டப்பட்டுள்ளது. இது, மொத்த வெளியீட்டு தொகையில் 60 சதவீதமாகும்.கடந்த 2009-10ம் நிதியாண்டில், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 46 ஆயிரத்து 941 கோடி ரூபாயாகும். நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், பங்கு வெளியீட்டின் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை 4,468 கோடி ரூபாய் மட்டுமே. அதே சமயம், கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், இத்தொகை 29 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக இருந்தது. நான்காவது காலாண்டில், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கங்களால் தான், பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, பங்கு வெளியீட்டை மேற்கொள்ள இருந்த பல பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பங்கு வெளியீட்டை ஒத்திபோட்டுள்ளதாக, பிரைம் டேட்டா பேஸ் குறிப்பிட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, இந்திய பங்குச் சந்தைக்கு, ஒரு பொன்னான ஆண்டாக கருதப்பட்டது. இதனால், கடந்த 2007-08ம் நிதியாண்டில், பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை மிகவும் அதிகபட்சமாக, 52 ஆயிரத்து 219 கோடி ரூபாயாக இருந்தது.பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம், திரட்டிய 27 ஆயிரத்து 537 கோடி ரூபாயில், 22 ஆயிரத்த 763 கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டிருந்த, குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் வாயிலாக, திரட்டப்பட்டதாகும். மீதமுள்ள 4,774 கோடி ரூபாய், அந்நிறுவனங்களின் புதிய பங்குகள் வாயிலாக திரட்டப்பட்டதாகும். ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், மூலதனச் சந்தையில் களம் இறங்கின. இவற்றுள் கோல் இந்தியா நிறுவனம் முதல்முறையாக, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் 15 ஆயிரத்து 199 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இவ்வாண்டு திரட்டப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டு தொகையில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு தொகை 33 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுத்துறையைச் சேர்ந்த மங்கனீஸ் ஓர் இந்தியா (எம்.ஓ.ஐ.எல்.), சட்லஜ் ஜல் வித்யூத் நிகம் (எஸ்.ஜே.வி.என்.எல்.) மற்றும் பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் ஆகியவை முதல் முறையாக பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கியது. அதே சமயம், பவர்கிரிட், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, இன்ஜினீயர்ஸ் இந்தியா ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டிக் கொண்டன.மொத்தம் 57 நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கின. இது, சென்ற நிதியாண்டில், 44 ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டில் (57), 52 புதிய பங்கு வெளியீடுகளாகும். இதன் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 72 சதவீதம் அல்லது 33 ஆயிரத்து 183 கோடி ரூபாயாகும்.சென்ற நிதியாண்டில் (2009-10), 39 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இதன் வாயிலாக, 24 ஆயிரத்து 948 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது.நடப்பு நிதியாண்டில், இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம், ஐந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை 13 ஆயிரத்து 84 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம், சென்ற நிதியாண்டில், இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, ஐந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை 21 ஆயிரத்து 993 கோடி ரூபாயாக சற்று அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் அதன் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|