பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:56
இந்த வாரம், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், இவ்வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 20 ஆயிரம் புள்ளிகளை எட்டிவிடும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மை காலமாக, பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு நிலையை சாதகமாக பயன்படுத்தி பலர், லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்து போனது. மேலும், உலகின் பல நாடுகளில், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டதும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.வெள்ளிக்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 139 புள்ளிகள் சரிவடைந்து, 19,451 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 43 புள்ளிகள் குறைந்து, 5,842 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், சென்ற வாரத்தில், 'சென்செக்ஸ்' 31.06 புள்ளிகளும், 'நிப்டி' 15.95 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. புதிய வெளியீடு: பி.டி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள், வெளியீட்டு விலைக்கும் குறைவாக கைமாறின. அதேபோன்று, சில்பி கேபிள் நிறுவனங்களின் பங்குகள், வெள்ளிக்கிழமையன்று, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. 69 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இதன் பங்கு வெளியீட்டிற்கு போதிய அளவிற்கு ஆதரவு கிடைத்திருந்தது. பட்டியலிடப்பட்ட தினத்தன்று, முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு லாபம் தரும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் வெளியீட்டு விலையை விட, 23 சதவீதம் அதிகரித்த இதன் பங்கின் விலை, அதே தினத்தில், 30 சதவீதம் சரிவடைந்து, 47.60 ரூபாயில் இழப்புடன் முடிவடைந்தது. வோடாபோன் எஸ்ஸார்: அண்மையில், வோடபோன் - எஸ்ஸார் மற்றும் கெய்ரன் இந்தியா - வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான கையகப்படுத்தும் நடவடிக்கைகள், நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகள் இழுபறி நிலையில் தான் உள்ளன. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இவை முக்கிய இடம் வகிக்கும். உலகளவில் கச்சா எண்ணெய்விலை உயர்ந்து வருகிறது. இதனால், கெசிரன் இந்தியாவின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மோட்டார் வாகனத் துறை: உள்நாட்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனை, சென்ற ஆண்டில், மிகவும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, கடந்த 2009ம் ஆண்டில், 15 லட்சம் மோட்டார் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், இது, சென்ற 2010ம் ஆண்டில், 30 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால், கடன்களுக்காக வட்டி விகிதம் அதிகரித்து வருவது, பெட்ரோல் - டீசல் விலைகளின் உயர்வு போன்றவை, மோட்டார் வாகனங்கள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இந்தியாவில் மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் உள்ளது. எனவே, இத்துறை குறித்து நாம், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வெள்ளி: கடந்த பல ஆண்டுகளாக, தங்கத்தின் விலை தான் தாங்க முடியாமல் உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது வெள்ளியின் விலை உயர்வும், முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி, 61 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதன் விலை மேலும் அதிகரிக்குமா என்பது தான், தற்போது எல்லார் மனதிலும் எழுந்துள்ளது. ஆபரணங்கள் பயன்பாடு தவிர, தற்போது, தொழில் துறைகளிலும் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சோலார் பேனல்களில் பின்புறம் பூசப்படும் ரசம், ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் என, வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவும் விலை உயர்விற்கு காரணமாகக் கூறப்படுகிறது. வட மாநிலங்களில் விவசாயிகள், காலம் காலமாக வெள்ளியில் தான், அதிகமாக முதலீடு செய்து வந்தனர். இது, இப்போது அவர்களுக்கு அதிகளவில் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும். வரும் வாரம் எப்படி இருக்கும்? கடந்த ஒரு சில வாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த வாரம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிப்பதாக இல்லை என்றே சொல்லலாம். 'சென்செக்ஸ்' 20 ஆயிரத்திற்கு அருகில் தான் உள்ளது. எனவே, வரும் வாரத்தில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கலாம் அல்லது சிறிது குறைந்து பிறகு, மேலே செல்லவும் வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள், தற்போதைய நிலவரம் குறித்து, கவலைப்படத் தேவையில்லை.இந்நிலையில், இம்மாதத்தில் பல நிறுவனங்கள், 2010-11ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிடத் தொடங்கும். அவற்றின் முடிவுகள் நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிறுவனங்களின் செயல்பாடு நன்கு இருக்கும் நிலையில், பங்கு வர்த்தகமும் சிறப்பாக இருக்கும். சேதுராமன் சாத்தப்பன்--
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|