பதிவு செய்த நாள்
10 ஏப்2011
05:00
புதுடில்லி:உலகின் பல்வேறு நாடுகளில் புண்ணாக்கிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற 2010 -11ம் நிதியாண்டில், நம் நாட்டிலிருந்து, 50.72 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதியாகி உள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில் 8,220 கோடி ரூபாய்.சென்ற நிதியாண்டில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, கடந்த 2009 -10ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அளவின் அடிப்படையிலான ஏற்றுமதியை விட, 57 சதவீதம் அதிகம். இதே ஆண்டுகளில், இதன் மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 59 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது, கடந்த 2009 -10ம் நிதியாண்டில், 32.22 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு, 5,176 கோடி ரூபாய்.நாட்டின் பல மாநிலங்களில், சென்ற நிதியாண்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி மிகவும் அதிகரித்திருந்தது. இதனால், புண்ணாக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் புண்ணாக்கு வகைகள், வெளிநாடுகளில் கால்நடை மற்றும் கோழித் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் சென்ற நிதியாண்டில், எண்ணெய் வித்துகள் உற்பத்தி, 2.78 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இது, 2009 -10ம் நிதியாண்டில், 2.49 கோடி டன் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது. மேலும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் மற்றும் புண்ணாக்கின் விலை அதிகரித்துள்ளதால், புண்ணாக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இது லாபம் அளிப்பதாக உள்ளது.சென்ற மார்ச் மாதத்தில் மட்டும், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 2 மடங்கு அல்லது 158 சதவீதம் அதிகரித்து, அதாவது, 2.24 லட்சம் டன் என்ற அளவிலிருந்து, 5.79 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.நாட்டின் மொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில், (50லட்சத்து 71 ஆயிரத்து 779 டன்) சோயா புண்ணாக்கின் பங்களிப்பு, மிகவும் அதிகமாக, அதாவது 39 லட்சம் டன்னாக உள்ளது. இதையடுத்து, கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 9.36 லட்சம் என்ற அளவிலும், ஆமணக்கு புண்ணாக்கு 2.09 லட்சம் டன் என்ற அளவிலும், தவிட்டு புண்ணாக்கு 66 ஆயிரத்து 650 டன் என்ற அளவிலும், கடலை புண்ணாக்கின் பங்களிப்பு 21 ஆயிரத்து 480 டன் என்ற அளவிலும் இருந்தது.நம் நாட்டிலிருந்து ஜப்பான், வியட்நாம், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள், மிக அதிகளவில் புண்ணாக்கு வகைகளை இறக்குமதி செய்து கொள்கின்றன. இவை தவிர, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், தாய்லாந்து, ஈரான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு புண்ணாக்கு வகைகளை இறக்குமதி செய்து கொள்கின்றன.சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 141.30 சதவீதம் அதிகரித்து, அதாவது, 1.69 லட்சம் டன் என்ற அளவிலிருந்து, 4.09 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பு எண்ணெய் பருவத்தின் (அக்டோபர் - செப்டம்பர்), முதல் அரையாண்டு காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளது. 2010ம் ஆண்டு அக்டோபர் முதல், நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, 29 லட்சம் டன் புண்ணாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, சென்ற ஆண்டின் எண்ணெய் பருவத்தில், 15 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இக்காலத்தில் இதன் ஏற்றுமதி, 100 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு சமையல் எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம்நாடு, இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பாமாயிலையும், அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து, சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகளையும் இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|