பதிவு செய்த நாள்
19 ஏப்2011
16:48
வாஷிங்டன் : கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, நிதியாண்டில் வருமானம் குறைந்தாலும் மில்லியனராகவே நீடித்துக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. சமீபத்தில், அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்களின் வருமானம் மூ்னறில் 2 பங்கு கு்றைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா இருவரும் இணைந்து, 2010ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில், 2009ம் ஆண்டில் இருந்ததைவிட, 2010ம் ஆண்டில் தங்களது வருமானம் மூன்றில் 2 பங்கு சரிந்துள்ளதாக தெரிவித்தனர். 2009ம் ஆண்டில், 5.5 மிலலியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஒபாமா குடும்பத்தின் வருமானம், இந்த ஆண்டில் 1.73 மில்லியன் அமெரிக்க டாலர்களாக காட்டப்பட்டுள்ளது. அதிபர் புத்தகங்களை விற்பனை செய்ததன் மூலமே, வருமானத்தின் பெரும்பகுதி ஈட்டபட்டதாகவும், ஒபாமா குடும்பத்தினர் மொத்த பெடரல் வரியாக 4,53,770 அமெரிக்க டாலர்களை கட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களது வருமானத்தில் 14.2 சதவீதம் அதாவது, 2,45,075 அமெரிக்க டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர். இவற்றில், பிஷ்ஷர் ஹவுஸ் பவுண்டேசனுக்கு அதிக அளவாக 1,31,075 அமெரிக்க டாலர்களாக நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இல்லினாய்ஸ் நகரில் இவர்கள் தாக்கல் அறிக்கையில், மாகாண வருமான வரியாக 51,568 அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளனர். அதேபோல், துணை அதிபர் ஜோ பீடன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். 3,79,178 அமெரிக்க டாலர்களை வருமானமாக காட்டியுள்ள அவர்கள், மொத்த பெடரல் வரியாக 86,626 அமெரிக்க டாலர்களை கட்டியதாகவும், தொண்டு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு உதவி செய்த விதமாக 5,350 அமெரிக்க டாலர்களை அவர்கள் கணக்கில் காட்டியுள்ளனர். இதுபோல, மற்ற நாட்டின் தலைவர்களும் தங்களது வருமான வரிக் கணக்கை காட்ட முன் வருவார்களா? என்பதே மக்களின் ஏகோபித்த கேள்வியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|