பதிவு செய்த நாள்
26 ஏப்2011
16:21
புதுடில்லி : அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பில் இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் டிஃபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசன் (டிஆர்டிஓ), ராணுவத்தில் பயன்படுத்தும் பொருட்டு, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்து செயலிழக்கும் தொழில்நுட்பம், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, டிஆர்டிஓ உடன், அமெரிக்காவைச் சேர்ந்த க்ரோவ் அண்ட் கம்பெனி எல்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, க்ரோவ் நிறுவனம், இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தில் மேம்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்பின்னரே, அமெரிக்க ராணுவத்தில் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த க்ரோவ் அண்ட் கம்பெனி தலைவர் ஃபயே க்ரோவ் கூறியதாவது, அமெரிக்க அரசின் ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரிலே நாங்கள் செயல்பட உள்ளதாகவும், அமெரிக்க ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்திய பின் சர்வதேச நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டிஆர்டிஓ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் இந்த தொழில்நுட்பம், தங்கள் அமைப்பின் ஒரு அங்கமான புனேவைச் சேர்ந்த ஹை எனர்ஜி மெட்டீரியல் ரிசர்ச் லேப் (ஹெச்இஎம்ஆர்எல்) மேற்பார்வையில் டிரைநைட்ரோடொலுவின் (டிஎன்டி), டைனமைட் அல்லது பிளாக் பவுடர் கலவைப் பொருளாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு குறைந்த அளவிலான வெடிபொருட்களையும் இது துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் பெற்றதாக அவர் தெரிவித்தார். ஆர்மனென்ட்ஸ் மற்றும் கொம்பாட் இஞ்ஜினியரிங் துறையின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரிவின் உயர் அதிகாரி சுந்தரேஷ் இதுகுறித்து கூறியதாவது, இந்த தொழில்நுட்பம் மிகுந்த திறன் வாய்ந்தது என்றும், இதுவரை, இந்திய பாதுகாப்புப் படையில் பயன்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது சர்வதேச அளவில் பயன்பட உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம், இந்திய ராணுவத்தின் ஒருபிரிவான வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கும் படை, பாராமிலிட்டரி மற்றும் தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேச காவல்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.உலக வல்லரசான அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பில், இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பது, நம்மைப்போன்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையளிக்கும் விசயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|