பதிவு செய்த நாள்
02 மே2011
00:10
மும்பை: இந்திய நிறுவனங்கள், சென்ற மார்ச் மாதத்தில், 25 ஆயிரத்து 898 கோடி ரூபாய் மதிப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து வணிக கடன்களை பெற்றுள்ளன. இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், உள்நாட்டு நிறுவனமொன்று, அதன் விரிவாக்கத் தேவைக்காக ஒரு நிதியாண்டில் 50 கோடி டாலர் (2,300 கோடி ரூபாய்)அளவிற்கு சுயமாக வெளிநாடுகளில் நிதி திரட்டிக் கொள்ளலாம். இதற்கும் அதிகமான தொகையை திரட்ட வேண்டுமானால், மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும். இதன்படி, சென்ற மார்ச் மாதம், இந்தியாவை சேர்ந்த 90 நிறுவனங்கள், 290 கோடி டாலர் (13 ஆயிரத்து 340 கோடி ரூபாய்) அளவிலான ஈ.சி.பி. என்றழைக்கப்படும் அன்னிய வணிக கடன்களைப் பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வழக்கமான நடைமுறையில் இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளன.அதேசமயம், 11 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், 273 கோடி டாலர் (12 ஆயிரத்து 558 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய வர்த்தக கடன்களை பெற்றுள்ளன. இந்த இரு வழிமுறைகளின் மூலம் இந்திய நிறுவனங்கள், சென்ற மார்ச் மாதம் 25 ஆயிரத்து 898 கோடி ரூபாய், வெளிநாடுகளிலிருந்து வணிக கடன்களை திரட்டியுள்ளன. இவ்வகை கடன்களை திரட்டியதில், நுகர்பொருள் துறையில் ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனம், முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, வெளிநாடுகளில் இருந்து பொறியியல் சாதனங்களை இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த செலவை சமாளிப்பதற்காக இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதம், வெளிநாடுகளில் இருந்து 45 கோடி டாலரை (2,070 கோடி ரூபாய்) கடனாகப் பெற்றுள்ளது.அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாட்டு வங்கிகள், நிதிநிறுவனங்களிடமிருந்து 30 கோடி டாலர் (1,380 கோடி ரூபாய்) திரட்டிக் கொண்டன.உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், அதன் தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து 28 கோடி டாலர் (1,288 கோடி ரூபாய்) அளவிற்கு கடன் பெற்றுள்ளது.ஐ.டி.எப்.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும், இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் பைனான்ஸ் நிறுவனம், அதன் திட்டச் செலவினங்களுக்காக, சென்ற மார்ச் மாதம், 25 கோடி டாலர் (1,150 கோடி ரூபாய்)அளவிற்கு வெளிநாடுகளிலிருந்து வணிக கடன் பெற்றுள்ளது.உருக்குத் துறையை சேர்ந்த பூஷன் ஸ்டீல் நிறுவனமும், வெளிநாடுகளில் இருந்து, 12.50 கோடி டாலரை (575 கோடி ரூபாய்) கடனாக பெற்றுள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையில்அன்னிய முதலீட்டு உச்சவரம்பு உயர்வு இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்பு துறை நிறுவனங்கள் வெளியிடும், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் மீதான அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை, 500 கோடி டாலரிலிருந்து (23 ஆயிரம் கோடி ரூபாய்), 2,500 கோடி டாலராக (1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது, அடிப்படை கட்டமைப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களுக்காக, கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன. இவற்றில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு உச்ச வரம்பு, தற்போது 500 கோடி டாலராக (23 ஆயிரம் கோடி ரூபாய்)உள்ளது. இந்த வரம்பை 2,500 கோடி டாலராக (1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்), மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரம்பை உயர்த்தியதன் மூலம், இந்திய நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் மொத்த முதலீட்டு வரம்பு, 4,000 கோடி டாலராக (1 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும். இதில், நிறுவனங்கள் வெளியிடும் கடன்பத்திரங்கள் மீதான அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு உச்ச வரம்பு 1,500 கோடி டாலராகவும் (69 ஆயிரம் கோடி ரூபாய்), அடிப்படை கட்டமைப்பு துறையில் இந்த முதலீடு 2,500 கோடி டாலர் (1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவிற்கும் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|