பதிவு செய்த நாள்
04 மே2011
02:12
மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு குறைந்த கால அடிப்படையில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.50 சதவீதம் உயர்த்தி, 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதேபோன்று ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.50 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், வங்கிகள் டிபாசிட் மூலம் திரட்டும் மொத்த தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை இருப்பு வைக்கும், சி.ஆர்.ஆர்., எனப்படும் ரொக்க இருப்பு விகிதத்தில் (6 சதவீதம்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வகையில், நடப்பு 2011-12ம் நிதியாண்டிற் கான நிதி கொள்கையை, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பா ராவ், செவ்வாய்கிழமையன்று அறிவித்தார்.சென்ற மார்ச் மாதத்தில், பணவீக்கம் 8.98 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. எனவே, நாட்டின் பணவீக்கத்தையும், பணப் புழக்கத்தையும் குறைக்கும் வகையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ஒன்பதுமுறை உயர்த்தியுள்ளது. 'ரெப்போ ரேட்' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' போன்ற வட்டி விகிதங்கள் அதிகரிப் பால், பணப்புழக்கம் குறையும் என்றாலும், வீட்டு வசதி, வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கும்.சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது போன்றவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவிற்கு இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில், 9 சதவீத அளவிற்கு இருக்கும் என, முன்பு மதிப்பிட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய பட்ஜெட்டில், உரம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான மானிய சுமை திட்டமிட்டதை விட அதிகரித்து வருகிறது. இதனால், நிதிப் பற்றாக்குறை மேலும் உயர வாய்ப்புள்ளது என, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதியன்று, வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகித கட்டுப்பாட்டை நீக்க இருப்பதாக, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி, பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்ட நிதிக் கொள்கையில், வங்கி சேமிப்பு கணக்கிற்கான தற்போதைய 3.5 சதவீத வட்டியை, 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பிற்கு அதிக வருவாய் கிடைக்கும்.கடந்த 1997ல், ரிசர்வ் வங்கி, வங்கிகளில் மேற்கொள்ளப்படும் குறித்த காலவைப்பு தொகைக்கான கட்டுப்பாட்டை நீக்கியது. ஆனால், 2003ல், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த வட்டிவிகி தத்தில், மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது,வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி கூறுகையில், 'சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக அதிகரித்திருப்பது வரவேற்க கூடிய அம்சம். சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், இந்திய குடும்பங்களில், 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கான தொகை, வங்கிகளில் சேமிக்கப்படாமல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில், வைப்புத் தொகையில் முதலீடு செய்வதை பலர் விரும்புவதில்லை.இந்நிலையில், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர், வங்கிகளின் சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்ய துவங்குவர். சேமிப்பு கணக்குகளால், வங்கிகளுக்கு அதிக செலவினம் ஏற்படுவதில்லை. இதற்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், இது, வங்கிகளுக்கு குறைந்த வட்டி செலவினத் தையே அளிக்கும்' என்றார். திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலு வாலியா கூறியதாவது:உள்நாட்டில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் என்ற குறைந்த அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தாமல், 0.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது, கண்டிப்பாக நாட்டின் பணவீக்கத்தை வெகுவாகக் குறைக்கும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2011-12ம் ஆண்டில், 8 சதவீதமாக இருக்கும் என்ற, ரிசர்வ் வங்கியின் மதிப்பீடும் ஏற்கக் கூடியதே. திட்டக் குழு, நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்து, இன்னும் மதிப்பீடு செய்யவில்லை என்றாலும், ரிசர்வ் வங்கியின் 9 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பீடு நியாயமானது என்றே கருதலாம். இவ்வாறு அலுவாலியா கூறினார். 'ரெப்போரேட்' 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு, 7.25 சதவீதமாகிறது. 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' 0.50 சதவீதம் உயர்ந்து, 6.25 சதவீதமாக அதிகரிப்பு. வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை. சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம்,4 சதவீதமாக உயர்கிறது. நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு. 2010 மார்ச் முதல், வங்கிகளுக்கான வட்டி 9 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோலிய பொருள்கள் விலையை நிர்ணயிக்க பரிந்துரை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|