பதிவு செய்த நாள்
05 மே2011
16:49
சென்னை : 102 வயதான அடிகளார் ஆசிரியர், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மிக அதிக வயது பயணி என்ற பெருமையை பெறுகிறார். இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை, 98 வயதான பயணி தான், தங்கள் விமானத்தில் பயணம் செய்த அதிக வயதான பயணியாக இருந்தார். தற்போது, அந்த சாதனையை 102 வயதான திரு அடிகளார் ஆசிரியர் முறியடித்துள்ளார். இவரது பயணத்தின் மூலம் தங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் பெரும்புலமை பெற்ற அடிகளார் ஆசிரியர், தாம் தமிழ் இலக்கியத்தில் ஆற்றிய பணிக்கு இந்திய அரசு சார்பில், மே 6ம் தேதி, ஜனாதிபதி அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்க உள்ளார். இதனைப் பெறுவதற்காகவே, அவர் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மே 10ம் தேதி, தனது 102வது பிறந்தநாளை கொண்டாட உள்ள திரு அடிகளார் ஆசிரியர், நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கான ரகசியமாக கூறியது யாதெனில், நான், வீட்டில் தவிர வெளியிடங்களில் எங்கும் சாப்பிடுவதில்லை என்றும், என்னுடைய வேலைகளை பெரும்பாலும் நானே செய்துகொள்கிறேன். நான் எங்கு சென்று தங்க நேர்ந்தாலும், இருக்கும் இடத்தில் சமைத்ததை மட்டும் சாப்பிடுகிறேன் என்று அவர் கூறினார். விமானப் பயணம் பெரும் மகிழ்ச்சியளித்ததாகவும், விமானம் தரையிறங்கும் போது தான் காது சவ்வு கிழியும் அளவிற்கு சத்தம் கேட்டது. அது மிகவும் அகோரமாக இருந்ததை உணர்ந்ததாக அவர் கூறினார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகாவில் பிறந்த அடிகளார் ஆசிரியர், இதுவரை 64 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தொல்காப்பியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டதன் பலனாக, மத்திய அரசு சார்பில் அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்ற அடிகளார் ஆசிரியர், தன் மூச்சு உள்ளவரை தமிழுக்காக தொண்டாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|