பதிவு செய்த நாள்
07 மே2011
00:19
- திருமை. பா. ஸ்ரீதரன் - நடப்பு ஆண்டு அட்சய திருதியை காலத்தில், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியையின் போது, தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. முன்பு, தென் மாநிலங்களில் மட்டுமே இவற்றின் விற்பனை காணப்பட்டது. ஆனால், தற்போது வடமாநிலங்கள் தவிர, இந்தியர்கள் அதிகளவில் வாழும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அட்சய திருதியையின் போது, தங்கம் விற்பனை அதிகரித்து வருவதாக, உலக தங்க கவுன்சிலின் இயக்குனர் எம்.சிவ்ராம், 'தினமலர்' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது தெரிவித்தார்.உள்நாட்டில் மக்களின் செலவிடும் வருவாய், மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, அவர்களின் மொத்த முதலீட்டில், 15 - 20 சதவீத அள விற்கு உள்ளது. இவ்வாண்டு அட்சய திருதியை அன்று, சென்ற ஆண்டின் இதே நாளை விட, மதிப்பின் அடிப்படையில் இவற்றின் விற்பனை, 15 - 20 சதவீத அளவிற்கும், அளவின் அடிப்படையில், 5 - 10 சதவீத அளவிற்கும் உயரும் என தெரிகிறது. சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், அமெரிக்க டாலரின் விலை சரிவடைந்து வருவது போன்றவற்றாலும், தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. வெள்ளிக்கிழமையன்று, காலை முதல், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் விற்பனை, மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடும் வெயிலின் காரணமாக மதியத்தில், கடைகளில் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. மீண்டும் மாலையில், தங்கம் விற்பனை செய்யும் கடைகளில், கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வெள்ளிக்கிழமையன்று, தங்கத்தின் விலை, வியாழக்கிழமை நிலவிய விலையை விட, குறைந்திருந்தது. இவ்விரு தினங்களுக்கும் இடையில், ஒரு சவரன், 22 காரட் தங்கத்தின் விலை, 216 ரூபாய் குறைந்திருந்தது. இதற்கு, உலகச் சந்தைகளில் இதன் விலை குறைந்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உள்நாட்டில், தங்கம் இறக்குமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2010ம் காலண்டர் ஆண்டில், நம் நாடு 963 டன் தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இது, 2009ம் ஆண்டில் 507 டன் என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், நாட்டின் தங்கம் இறக்குமதி 11 சதவீதம் அதிகரித்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில், நகைக் கடைகள் தவிர, பல முன்னணி வங்கிகளும் தங்கக் காசுகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. வங்கிகளிலும், இவ்வாண்டு மிக அதிகளவில் தங்கக் காசுகளை மக்கள் வாங்கியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்பெல்லாம், திருமண காலங்களில் மட்டுமே அதிகளவில் தங்க நகைகள் வாங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அட்சய திருதியை, தீபாவளி, வரலட்சுமி நோன்பு போன்ற பண்டிகை காலங்களில், தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக, திருமண காலங்களில் 70 - 80 சதவீத அளவிற்கு தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அட்சய திருதியை உள்ளிட்ட பண்டிகை காலங்களில், 70 சதவீத அளவிற்கும், திருமண காலங்களில் இவற்றின் விற்பனை, 40 - 45 சதவீத அளவிற்கும் உள்ளது. உலகளவில், தென் ஆப்ரிக்காவில்தான் மிக அதிகபட்சமாக, 260 - 270 டன் வரை, தங்கம் உற்பத்தி ஆகிறது. உலகின் மொத்த தங்க உற்பத்தியில், இந்நாட்டின் பங்களிப்பு 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தற்போது, சீனாவும் தங்க உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. சீனாவில் தற்போது, ஆண்டுக்கு 270 - 280 டன் என்றளவில் தங்க உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இவை தவிர, ஆஸ்திரேலியாவின் 'பெர்த்' தங்கச் சுரங்கம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தங்கம் அதிகளவில் உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு அதிகளவில் வருவாய் கிடைப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை, சென்ற ஆண்டை விட, இவ்வாண்டு, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்தின் அளவு மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், அவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு சிவ்ராம் கூறினார். ஒரே வாரத்தில் வெள்ளி விலை ரூ.22,000 குறைந்தது வெள்ளியின் விலை, கடந்த சில மாதங்களாக, வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வந்தது. சென்ற ஜனவரி மாதம் 1ம் தேதி, ஒரு கிலோ வெள்ளியின் விலை, 49 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இது, மார்ச் மாதம் 1ம் தேதி, 55 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்தது. வெள்ளியின் தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இதன் விலை உச்சக்கட்டமாக, ஏப்ரல் 30ம் தேதியன்று, 76 ஆயிரத்து 600 ரூபாயாக மேலும் உயர்ந்தது. இந்த விலை உயர்வால், வெள்ளி மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், மே 2ம் தேதி, ஒரு கிலோ வெள்ளியின் விலை, 72 ஆயிரத்து 850 ரூபாயாக குறைந்தது. அதுமுதல், வெள்ளியின் விலை மளமளவென சரியத் தொடங்கியது. வெள்ளிக் கிழமையன்று, ஒரு கிலோ பார் வெள்ளி, 54 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக, ஒரே வாரத்தில், வெள்ளியின் விலை, கிலோவுக்கு 22 ஆயிரத்து 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|