பதிவு செய்த நாள்
12 மே2011
03:10
புதுடில்லி:நடப்பு ரபி பருவத்தில் (ஏப்ரல் - ஜூன்), அரசின் முகமை அமைப்பான இந்திய உணவுக் கழகம், இதுவரை, 2.17 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது என, மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில், மத்திய உணவுக் கழகம், 2.10 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்திருந்தது. பஞ்சாப் மாநிலத்தில், அதிகபட்சமாக, 1.03 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில், இம்மாநிலத்திலிருந்து, ஒரு கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து, அரியானா மாநிலத்தில் இவ்வாண்டு, இதுவரை, 64.14 லட்சம் டன்னும் (62.93 லட்சம் டன்), மத்திய பிரதேசத்தில் இருந்து, 34 லட்சம் டன்னும் (30.01 லட்சம் டன்), ராஜஸ்தானிலிருந்து, 6.89 லட்சம் டன்னும் (4.31 லட்சம் டன்), உத்தரபிர தேசத்திலிருந்து, 8.77 லட்சம் டன்னும் (10.54 லட்சம் டன்), கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த, 2010-11ம் முழு நிதியாண்டில், அரசின் முகமை அமைப்புகள், 2.25 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்திருந்தன. இவ்வாண்டு, இது, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு, ஏப்ரல் 1ம் தேதியன்று, மத்திய அரசின் கைவசம், 1.54 கோடி டன் கோதுமை கையிருப்பில் இருந்தது. அதிகளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், உணவுக் கழகத்திற்கு, கோதுமையை கிடங்கில் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.நடப்பாண்டு ஏப்ரல் முதல், ஜூன் வரையில், 50-55 லட்சம் டன் கோதுமை வினியோகத்திற்கு அனுப்பப்படும் நிலையில், மத்திய அரசின் கைவசம், 3.60 கோடி டன் கோதுமை கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, குறைந்தபட்ச இருப்பு அளவான, 2.01 கோடி டன்னை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, நடப்பு 2010- 11ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), அரசின் நெல் கொள்முதல், 2.72 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2009-10ம் கொள்முதல் செய்யப்பட்டதை விட, (2.70 கோடி டன்) அதிகம். கோதுமை உற்பத்தி 8.50 கோடி டன்னாக உயரும்:நடப்பு 2010-11ம் ஆண்டு, ரபி பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி 8.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் இணையமைச்சர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.வேளாண் அமைச்சகத்தின், மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நாட்டின் கோதுமை உற்பத்தி, 8.43 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோதுமை அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில், இதன் வரத்து அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், கோதுமை உற்பத்தி, மதிப்பீட்டை விட அதிகரித்து, 8.50 கோடி டன்னாக உயரும் என, அமைச்சர் குறிப்பிட்டார். வரும் 2025ம் ஆண்டில், உணவு தானியங்களுக்கான தேவை, 28 கோடி டன்னாக அதிகரிக்க கூடும். எனவே, அரசின் முகமை அமைப்புகள், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நடப்பு 2010-11ம் வேளாண் பருவத்தில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 23.59 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|