பதிவு செய்த நாள்
13 மே2011
00:24
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது என்ற செய்தியால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆனால், உலகின் பல்வேறு நாடுகள், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன என்ற செய்தி, உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சுணக்க நிலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது மற்றும் சென்ற முழு நிதியாண்டில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை போன்றவற்றால், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்தது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், பொறியியல், வங்கி, மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 249.17 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,335.79 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,610.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,314.34 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டீ.எல்.எப்., ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 78.90 புள்ளிகள் குறைந்து, 5,486.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,572.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,476.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|