பதிவு செய்த நாள்
22 மே2011
02:10
சென்னை:இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருவதாக ஆய்வில் தெரிந்துள்ளது.சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதாக, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்துள்ளது. குறிப்பாக, ஆசியாவில் தைவான், இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட வளரும் நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீடு மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு, வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் 2,000 கோடி டாலர் (92 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொண்டன. இது முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 77 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைகளில், 2,900 கோடி டாலர் ( 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டன. இது வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் 15 சதவீதமாகும்.இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு, இவ்வாண்டு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட குறையும் என்ற மதிப்பீடு போன்றவற்றால், நம் நாட்டின் பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும் என்று கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறையும் என்ற எதிர்பார்ப்பும், அன்னிய முதலீடு குறைய காரணமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய பங்குச் சந்தைகளில் நடப்பாண்டில் 1,300 -1,400 கோடி டாலர் அளவிற்கே அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்திய பங்குச் சந்தைகளில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே 20ம் தேதி வரையில், அன்னிய நிதி நிறுவனங்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 478 கோடி ரூபாய் அளவிற்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 545 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்றுள்ளன. இந்த வகையில், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு 13 ஆயிரத்து 67 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் நடப்பாண்டு ஜனவரி முதல், மே 20ம் தேதி வரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. சீனா, ஜப்பான் நீங்கலான இந்த பட்டியலில் தைவான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் பங்குச் சந்தைகளில், மதிப்பீட்டு காலத்தில் 249 கோடி டாலர் (11 ஆயிரத்து 454 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட 150 சதவீதம் அதிகமாகும்.இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, ஆய்வின் வாயிலாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|