பதிவு செய்த நாள்
22 மே2011
09:16
நாமக்கல்: 'காஸ் டேங்கர் லாரிக்கான புதிய டெண்டரில், லோடு,'சார்ட்டேஜ்' 100 கிலோவிலிருந்து, 40 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும், 100 கிலோவாக ஆயில் நிறுவனத்தினர் உயர்த்த வேண்டும். இல்லையெனில், டேங்கர் லாரி உரிமையாளர்கள், டெண்டரில் பங்கேற்க மாட்டோம்' என, நாமக்கல்லில் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், 4,100 எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரிகள் இயங்கி வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, காஸ் எடுக்கும் பணிக்கு, காஸ் டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கிருந்து எடுக்கப்படும் காஸ், அந்நிறுவனங்களுக்கு சொந்தமான பாட்டலிங் சென்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்காக, சம்மந்தப்பட்ட காஸ் டேங்கர் லாரிகளுக்கு, ஒரு கி.மீ., ஒன்றுக்கு, 2.11 ரூபாய் வீதம், அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மலைப்பகுதிக்கு, 2.17 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மூன்றாண்டுக்கு ஒரு முறை, டேங்கர் லாரிகள் இயக்குவதற்கான டெண்டர், அந்தந்த ஆயில் நிறுவனம் மூலம் நடத்தப்படும். இந்தாண்டுக்கான டெண்டர் காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே, புதிய டெண்டர் விபரம் சம்மந்தப்பட்ட ஆயில் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டெண்டரில், லோடு சார்ட்டேஜ் (பற்றாக்குறை) நிபந்தனை, 100 கிலோவிலிருந்து, 40 கிலோவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, டேங்கர் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லோடு ஏற்றப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, பாட்டலிங் சென்டருக்கு செல்லும் ஒவ்வொரு டேங்கர் லாரியிலும், சராசரியாக, 50 முதல் 72 கிலோ வரை லோடு சார்ட்டேஜ் ஏற்படும். 100 கிலோ வரை லோடு சார்ட்டேஜ் இருப்பதால், டேங்கர் லாரி உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்நிலையில், லோடு சார்ட்டேஜ், 40 கிலோ என, குறைக்கப்பட்டிருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என, காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக, சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பலரும், லோடு சார்டேஜ், 40 கிலோவை திரும்பப் பெற வேண்டும். மீண்டும், 100 கிலோ சார்ட்டேஜ் முறை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். ''லோடு சார்ட்டேஜ் அளவு, 100 கிலோவாக உயர்த்தும் வரை டெண்டரில் கலந்து கொள்ள மாட்டோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்,'' என, சங்கத் தலைவர் பொன்னம்பலம் தெரிவித்தார். எதிர்ப்புக்கான காரணம் டேங்கர் லாரி மூலம் காஸ் லோடு கொண்டு செல்லும்போது, வெயிலில் காஸ் ஆவியாகும். 100 கிலோ வரை லோடில் சார்ட்டேஜ் ஏற்பட்டால், அதற்கு எவ்வித கட்டணமும் ஆயில் நிறுவனம் பிடிக்காது. ஆனால், 100 கிலோவுக்கு அதிகமாக லோடில் குறைந்தால், ஒரு கிலோவுக்கு, 70 ரூபாய் வீதம் பிடித்தும் செய்யப்படும். ஆனால், 50 முதல் 72 கிலோ வரை மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டு வந்ததால், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு இதில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இம்முறை டெண்டரில் காஸ் லோடு சார்ட்டேஜ் அளவு, 40 கிலோவாக குறைக்கபட்டுள்ளதால், பாதிப்பு ஏற்படும் என்பதால், காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|