பதிவு செய்த நாள்
29 மே2011
02:48
நடப்பு வாரத்திலும் பங்கு சந்தை தொடர்ந்து, கீழே சரிவடைந்து தான் இருந்தது. எந்தவித பிடிமானமும் இல்லாமல், பரமபதத்தில் பாம்பு இறக்கி விடுவது போல, சந்தை ஒரேயடியாக கீழே இறங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' மீண்டும் 16,000 புள்ளிகளை தொட்டுவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் நீண்ட நாள்களாக இருப்பவர்கள், 8,000 புள்ளிகள் என்ற அளவையும், அண்மை ஆண்டுகளில் பார்த்துள்ளனர். எனவே, நீண்டகால முதலீட்டாளர்கள், வர்த்தகத்தில் ஏற்படும் வீழ்ச்சி கண்டு பயப்படாமல் உள்ளனர். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கு சந்தையின் இந்த இறக்க நிலை, கிலியை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். இந்நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம், முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பாக இருந்தது. வியாழனும், வெள்ளியும்: வியாழக்கிழமையன்று, 'சென்செக்ஸ்' 197 புள்ளிகள் உயர்ந்து, ஒன்பது வார குறைந்தபட்ச நிலையை ஓரளவிற்கு ஈடு செய்தது. பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் 'ப்ளூ சிப்' எனப்படும், பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கத் தொடங்கினர். இந்த நிலை வெள்ளிக்கிழமையன்றும் தொடர்ந்தது. இதனால், இவ்விரு தினங்களிலும் பங்கு வர்த்தகம், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை 'சென்செக்ஸ்' 221 புள்ளிகள் அதிகரித்து, 18,266 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 'நிப்டி' 64 புள்ளிகள் உயர்ந்து, 5,476 புள்ளிகளிலும் நிலைப்பெற்றன. இருப்பினும், சென்ற ஒரு வார காலத்தில், 'சென்செக்ஸ்' மொத்தம் 60 புள்ளிகள் இழப்புடனும், 'நிப்டி' 10 புள்ளிகள் இழப்புடனும் முடிந்தது. டீசல் விலை: பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையும், லிட்டருக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாய் உயரக்கூடும் என்ற செய்திகள் வருகின்றன. அதே சமயம், உற்பத்தி வரியில் 1.50 ரூபாய் குறைக்கப்படலாம் என்ற செய்தியும் வருகிறது. இவை இரண்டும் மேற்கொள்ளப்பட்டால், அது சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்டால், அது பங்கு வர்த்தகத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்: பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள கூடும் என்ற நிலைப்பாடு உள்ளது. இவ்வெளியீட்டின் வாயிலாக, 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இதன் பங்கின் விலை, 2,000 ரூபாய்க்கு அருகில் உள்ளது. இந்த விலையில், முதலீடு செய்வது என்பது முதலீட்டாளர்களுக்கு, சிரமமாக இருக்கும். எனவே, இந்நிறுவனம், பங்கு வெளியீட்டிற்கு முன்பாக அதன் பங்கு ஒன்றின் 10 ரூபாய் முகமதிப்பை, இரண்டு ரூபாய் முகமதிப்பில் பிரித்தளிக்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது. காலாண்டு முடிவுகள்: கெய்ரன் இந்தியா, இந்தியன் ஓட்டல்ஸ், பி.ஜி.ஆர். எனர்ஜி, முத்தூட் பைனான்ஸ், இன்ஜினியர்ஸ் இந்தியா, டிரெண்ட், பேங்க் ஆப் இந்தியா, எவரான், கோல் இந்தியா, டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், சிறப்பான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன. இவற்றின் வருவாய் மற்றும் நிகர லாபம், முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டை விட, சென்ற காலாண்டில் அதிகரித்துள்ளது. வங்கிப் பங்குகள்: வங்கித்துறை பங்குகளுக்கு இனி, வசந்தகாலமாக இருக்கும் என்று சொல்லலாம். புதிய வங்கிகள் தொடங்க, மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்திலும், பழைய வங்கிகளுள், ஒரு வங்கி இன்னொரு வங்கியை கையகப்படுத்தும் பட்சத்திலும், வங்கிப் பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது. தனலட்சுமி பேங்க், லட்சுமி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க் போன்ற வங்கிகளின் பங்குகளை வாங்கி வைக்கலாம். ஜுவல்லரி நிறுவனங்கள்: கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட, ஜுவல்லரி சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போக்கு குறைவாக இருந்தது. ஆனால், தற்போது தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர்வால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கும், ஒரு மவுசு வந்துள்ளது. தற்போதைய நிலையில் மக்கள், தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யாமல், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய வெளியீடுகள்: அண்மையில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள், வெள்ளிக்கிழமையன்று பட்டியலிடப்பட்டன. இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, பங்குகள் ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இதன் பங்குகளை வைத்திருந்தவர்கள், அதை விற்றுவிட்டு, தற்போது ஒதுக்கீடாகியுள்ள பங்குகளை பங்கு தொகுப்பில் வைத்துக் கொண்டுள்ளனர். இதன் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், பங்கு ஒன்றின் விலை, 200 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. சங்க்வி போர்ஜிங் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிட்டபோது, பங்கின் விலை வெளியீட்டு விலையை விட 33 சதவீதம் என்றளவில், உயர் விலைக்கு கைமாறியது. அண்மைக்காலத்தில், பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடும் போது, இந்நிறுவனப் பங்கிற்கு கூடுதல் விலை கிடைத்ததால், இதில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. வரும் வாரம் எப்படி இருக்கும்? ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது, பங்கு சந்தைகளுக்கு, இது ஒரு சோதனை காலம் என்றே சொல்லலாம். பல நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு முடிவுகளால், தற்போது சந்தை மேலே சென்றிருக்க வேண்டும். ஆனால், உலக நடப்புகள் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளால், பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாகவே உள்ளது. இருப்பினும், நாம் முன்பே கூறியது போல், சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு, இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். ஒரு நிறுவனத்தின் 100 பங்குகளை வாங்க நினைப்பவர்கள், ஐம்பது, ஐம்பது பங்குகளாக வாங்கலாம். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தின் போக்கும், இதை பிரதிபலிப்பதாகத்தான் இருந்தது. - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|