பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
04:19
மும்பை:பண்டிகை காலங்கள் வர உள்ள நிலையில், நூலிழையின் விலையும் சற்று குறைந்துள்ளது. விசைத்தறி களுக்கான நூலிழை தேவை அதிகரித்துள்ளது. இதனால், மிகவும் மோசமான நிலையில் இயங்கி கொண்டிருக்கும் நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி தொழில்கள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில், கடந்த சில மாதங்களாக பருத்தி விலை அதிகரித்ததால், நூற்பாலைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. சென்ற பிப்ரவரி மாதம் 356 கிலோ எடை கொண்ட ஒரு கேண்டி பருத்தியின் விலை 63 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. பெரிய அளவில் விலை இறங்காமல், இன்னும் ஒரு கேண்டி பருத்தி விலை 45 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நீடிக் கிறது.தொடர்ந்து விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டதால், விசைத்தறி தொழில் உற்பத்தி 50 சதவீதம் அள விற்கு பாதிக்கப்பட்டது. நூலிழை வாங்குவதை விசைத்தறியாளர்கள் நிறுத்தி கொண்டனர். அதிக விலை கொடுத்து நூலிழை வாங்கி துணி நெசவு செய்து, குறைந்த விலைக்கு துணிகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், இவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. நூலிழைக்கு தேவை குறைந்ததால், நூற்பாலைகள் செயல்பாடும் பாதிக்கப்பட்டது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 74 கோடியே 50 லட்சம் கிலோ என்ற அளவிற்கு மட்டுமே பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதனால், இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்யும் நாடுகள், சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்தன.தற்போது, ஏற்றுமதிக்கான உச்சவரம்பு 84 கோடியே 50 லட்சம் கிலோவாக உயர்த்தப்பட்ட நிலையிலும், சர்வதேச சந்தையில், இவற்றுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, பருத்தி மற்றும் பருத்தி நூலிழையின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், பண்டிகை காலங்கள் வர உள்ளதாலும், உள்நாட்டில் நூலிழைக் கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40ம் நம்பர் 'கோம்ப்டு' ரக பருத்தி நூலிழை, ஒரு கிலோ விலை தற்போது 220 ரூபாயாக உள்ளது. இது, சென்ற ஒரு மாதத்திற்கு முன்பு 250 ரூபாயாக இருந்தது.விசைத்தறி மற்றும் நூற்பாலைகளில் உற்பத்தி அதிகரிப்பிற்கான அறிகுறி ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது. இருந்தாலும், இன்னும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் நூலிழை வாங்குவோர் இருப்பதால், சந்தை விரைவில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|