பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
04:23
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மே 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 168 கோடி டாலர் (7,728 கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து 21 கோடி டாலராக (14 லட்சத்து 27 ஆயிரத்து 12 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற மே மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 104 கோடி டாலர் (4,784 கோடி ரூபாய்) உயர்ந்து, 30 ஆயிரத்து 853 கோடி டாலராக (14லட்சத்து 19 ஆயிரத்து 256 கோடி ரூபாய்) இருந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக, அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 167 கோடி டாலர் (7,682 கோடி ரூபாய்) அதிகரித்து, 27 ஆயிரத்து 887 கோடி டாலராக (12 லட்சத்து 82 ஆயிரத்து 802 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. மேலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 40 லட்சம் டாலர் (1,840 கோடி ரூபாய்) அதிகரித்து, 459 கோடி டாலராக (13 ஆயிரத்து 620 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|