பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:34
கொச்சி:சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தேங்காய் மற்றும் தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் 24 சதவீதம் வளர்ச்சி கண்டு 537 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 432 கோடி ரூபாயாக இருந்தது. சர்வதேச அளவில், தேங்காய் மற்றும் தேங்காய் பொருள்களுக்கான தேவை மிகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகளவில், தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இலங்கையில், சென்ற ஆண்டு உற்பத்தி குறைந்ததால், அந்நாடு, உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், வளைகுடா மற்றும் இதர ஆசிய நாடுகளில், தேங்காய் தேவையை ஈடு செய்யும் வகையில், இந்திய தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என, தேங்காய் மேம்பாட்டு வாரியத்தின் உயரதிகாரி தெரிவித்தார். மதிப்பின் அடிப்படையில், சென்ற நிதியாண்டில், தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், இதர தேங்காய் பொருள்களின் ஏற்றுமதி குறைந்ததையடுத்து, அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட, 8 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 24 ஆயிரத்து 373 டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில், இந்திய தேங்காயின் அளவு மற்றும் தரம் நன்கு உள்ளதால், குறிப்பாக, வளைகுடா நாடுகளில், தேவை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. உள்நாட்டில், அதிகளவு தேங்காய் உற்பத்தியாகும், கேரளாவிலும் இதன் உற்பத்தி குறைந்து போயுள்ளது. இதனால், தமிழ்நாட்டு தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு, நல்ல விலை கிடைத்து வருகிறது.கேரளாவில், கடந்த ஆண்டு தேங்காய் விலை 8 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது 13 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் ஏற்றுமதிக்கான தேங்காய், 10.50 ரூபாய்க்கு, வாங்கப்படுவதாக தேங்காய் மேம்பாட்டு வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|