பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:37
புதுடில்லி:சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் மின் துறையில், அன்னிய நேரடி முதலீடு, 125.20 கோடி டாலராக (5,759 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 12.8 சதவீதம் (143.70 கோடி டாலர்- 6,610 கோடி ரூபாய்) குறைவாகும் என தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு, சென்ற நிதியாண்டில் மின் துறையில், அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில், மேற்கொள்ளப்பட்டு வரும் மின் திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.அன்னிய நேரடி முதலீடு மட்டுமின்றி, மின் துறையில், ஒட்டு மொத்த அளவில் மேற்கொள்ளப்படும் முதலீடும் 5-6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளையும் சேர்த்து, மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 958 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. மின் உற்பத்திக்கு தேவையான அளவிற்கு நிலக்கரி கிடைப்பதில்லை. மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியும் மிகவும் காலதாமதமாகக் கிடைக்கிறது. மின் துறையில் முதலீடு குறைந்துள்ளதால், இதன் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி துறைக்கு தேவையான, எரிபொருள் கிடைக்கவில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு ஆய்வு மேற்கொண்டது. இக்கூட்டத்தில், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|