பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
23:57
மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்திய வங்கிகளின் வசூலாகாத கடன் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2009-10ம் நிதியாண்டில், வங்கிகளின் வசூலாகாத கடன், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 25 சதவீதம் அதிகரித்து, 77 ஆயிரத்து 48 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 20.97 சதவீதம் உயர்ந்திருந்தது.வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வங்கிகள் அந்த இடர்பாட்டை எதிர் கொள்ளும் வகையில், அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் வருவாய், ஓரளவிற்கு அதிகரிக்கும் என்றாலும், ஒட்டு மொத்த அளவில், வங்கிகளின் வசூலாகாத கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், வங்கிகளின், மொத்த வசூலாகாத கடனில், பாரத ஸ்@டட் வங்கியின் வலோகாத கடன், நான்கில் ஒரு பகுதி என்ற அளவில், அதாவது, 25 ஆயிரத்து 326 கோடி ரூபாயாக இருந்தது.பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், வழங்கப்படும் கடனுக்கான இடர்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், அதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு வருவதுடன், கடன் வசூலிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், இனி வரும் காலாண்டுகளில், வங்கிகளின் லாபம், மேம்படும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்னாள் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், பஞ்சாப் நேஷனல் வங்கியின், வசூலாகாத கடன், 4,379 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் 3,214 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிதியாண்டுகளில், பேங்க் ஆப் பரோடாவின் வசூலாகாத கடன், 2,400 கோடி ரூபாயிலிருந்து, 3,152 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.தனியார் துறையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வசூலாகாத கடன், 9 ஆயிரத்து 480 கோடி ரூபாயிலிருந்து, 10 ஆயிரத்து 34 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், எச்.டீ.எப்.சி வங்கியின் வசூலாகாத கடன், 1,816 கோடி ரூபாயிலிருந்து, 1,694 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ஆண்டு கணக்கில், இந்திய வங்கிகளின், ஒட்டு மொத்த வருவாய், 8 சதவீதம் என்ற அளவில்தான் வளர்ச்சி கண்டிருந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், இக் காலாண்டில், 99 சதவீதம் சரிவடைந்து 20.90 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு, இவ்வங்கியின், நிகர வட்டி வருவாய் வரம்பு குறைந்தது, வசூலாகாத கடன் அதிகரிப்பு மற்றும் பணியாளர் ஓய்வூதியத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ததுதான் காரணம்.அதேசமயம், பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, இதர வங்கிகளின் வருவாய் வளர்ச்சி, சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் வங்கிகள் வழங்கிய கடன்கள் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வங்கிகள் திரட்டிய டிபாசிட், குறைந்துள்ள நிலையில், இதற்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. வங்கிகள் வழங்கும், கடனுக்கான வட்டிக்கும், டிபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டிக்கும் உள்ள வித்தியாசம் குறைந்ததால், வங்கிகளின் நிகர வட்டி வருவாய் மிகவும் குறைந்துள்ளது. இதுவும், வங்கிகளின் நிகர லாப வளர்ச்சி குறைந்து போனதற்கு காரணமாகும். மேலும், வட்டி வருவாய் குறைந்ததால், வங்கிகளின் கருவூல வருவாயும் குறைந்து போயுள்ளது. இந்நிலையில், வசூலாகாத கடன்கள் அதிகரித்துள்ளதும், வங்கிகளுக்கு அதிக இடர்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன.பல வங்கிகள், அவற்றின் வருவாய் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளை (இதனை வங்கியாளர்கள் 'காசா'- இஅகுஅ என்று அழைக்கின்றனர்) அதிகளவில் தொடங்கும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏனெனில், மேற்கண்ட வங்கி கணக்குகளின் வாயிலாக, வங்கிகளுக்கு கூடுதல் லாப வரம்பு கிடைக்கிறது. நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல், இது வரையிலுமாக, 9 முறை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வங்கிகளில் கடன் வாங்கும் போக்கு குறைந்து போயுள்ளது. இதுவும், வங்கிகளின் வருவாய் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது என, வங்கித்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|