பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
23:57
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டிற்கு அதிகளவில் ஏற்றுமதி மேற்கொள்ளும் ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்கு வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், கடந்த இரண்டு வர்த்தக தினங்களின் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மருந்து, மோட்டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர் பொருள்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு தேவை இருந்தது.கடந்த நான்கு தினங்களாக, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில், வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு, 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் பங்கின் விலை, புதன்கிழமையன்று 1.2 சதவீதம் குறைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 101.33 புள்ளிகள் சரிவடைந்து, 18,394.29 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 18,505.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,365.94 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 29.30 புள்ளிகள் குறைந்து, 5,526.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,556.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,514.90 புள்ளிகள் வரை யிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|