பதிவு செய்த நாள்
15 ஜூன்2011
23:48
-ஆர்.நடராஜன்- தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 ஆயிரம் எக்டேரில், மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு மூன்று லட்சம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு அல்போன்சா, பெங்களூரா, செந்தூரா மற்றும் நீலம் உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகம் விளைகின்றன. மொத்த மாம்பழ சாகுபடி பரப்பளவில், வறட்சியை தாங்கக்கூடிய பெங்களூரா ரகம், 60 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. பெங்களூரா மாம்பழங்கள் தரமான மாங்கூழ் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெளிநாடுகளிலும், இதற்கு அதிக வரவேற்பு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 72 நிறுவனங்கள், மாம்பழக்கூழ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பொதுவாக, ஒரு தொழிற்சாலை, ஒரு பருவத்தில், மாம்பழக்கூழ் தயாரிக்க, 5,000 முதல் 7,000 டன் மாம்பழங்களை பயன்படுத்துகிறது.இதன்படி, அனைத்து தொழிற்சாலைகளும், ஒரு பருவத்தில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் டன் மாம்பழங்களை பயன்படுத்தி, 75 ஆயிரம் டன் மாம்பழக்கூழ் தயாரிக்கின்றன. மொத்த மாம்பழக்கூழ் உற்பத்தியில், 70 சதவீதம் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைக்கிறது.சென்ற ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, 7,800 கன்டெய்னர் மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம், 300 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்தது. 18.6 கிலோ எடை கொண்ட, ஒரு 'கார்ட்டன்' ( அட்டைப் பெட்டி)மாம்பழக்கூழ் 19 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் மாம்பழங்கள் குவிந்து வருகின்றன. உற்பத்தி அதிகரித்துள்ளதால், மாம்பழம் விலை குறைந்துள்ளது. ஒரு டன் பெங்களூரா மாம்பழம், 4,000 முதல் 5,000 ரூபா# வரை விற்பனையாகிறது.மாம்பழங்கள் விலை குறைந்துள்ளதால், குத்தகை வியாபாரிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த மாம்பழங்களை அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், தோட்டங்களில் விளைந்த பெங்களூரா ரக மாம்பழங்கள் அழுகத் துவங்கின.இதனால், விவசாயிகள் கிடைத்தவரை லாபம் என, மாம்பழ அறுவடையில் ஈடுபட்டு, மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு மாம்பழங்களை அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது மாம்பழக்கூழ் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.எனினும், பணியாட்கள் பற்றாக்குறை, மின்வெட்டு ஆகிய பிரச்னைகளால், மாம்பழக்கூழ் தயாரிப்பு பணி ”ணக்கம் கண்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் மாம்பழக்கூழ் விலை சரிவடைந்துள்ளதும், சென்ற ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 சதவீத மாம்பழக்கூழ் தேங்கியுள்ளதும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை கலக்கமடையச் செய்துள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலைகள் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் மாதவன் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளில், மே முதல், ஜூலை வரை அரவை இருக்கும். இந்த ஆண்டு, 15 நாள் தாமதமாக மாம்பழ அரவை தொடங்கியது. இரு ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகள் துவங்கப்பட்டதால், பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தால் விவசாயத்திற்கும், மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கும் பணியாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும், கடுமையான மின்வெட்டு காரணமாகவும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரை பயன்படுத்துவதால் செலவு அதிகரிக்கிறது. உலகளவில் கடந்தாண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்ததால், மாம்பழக்கூழ் விற்பனை குறைந்தது. இதனால், உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் மாம்பழக்கூழ் இருப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 18.6 கிலோ எடை கொண்ட ஒரு கார்ட்டன் மாங்கூழ், 11 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கார்ட்டன் மாங்கூழ் தயாரிக்க, 37 கிலோ மாங்காய்கள் தேவைப்படுகின்றன. நடப்பாண்டு விலையை கணக்கிட்டால், இதற்கு, 148 ரூபாய் செலவாகிறது. மேலும், அரவை கூலி 75 ரூபாய், பதப்படுத்துதல் மற்றும் கேன் சார்ஜ் 175 ரூபாய், போக்குவரத்து செலவு 100 ரூபாய் என, மொத்தம் 498 ரூபாய் செலவாகிறது.தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு கார்ட்டன் மாம்பழக்கூழ், 11 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதுள்ள டாலர் மதிப்பீட்டின்படி, ஒரு காட்டன் மாங்கூழ், 495 ரூபாய் என்ற அளவிலேயே விலை போகிறது. இதனால், இந்த ஆண்டு, மாம்பழக்கூழ் நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழக்கூழ் தொழிலை மேம்படுத்த, மாநில அரசு திட்டங்களை தீட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த தொழில் காலப்போக்கில் நசிந்து விடும். இவ்வாறு மாதவன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|