பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:06
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 312 கோடி டாலர் (14 ஆயிரத்து 352 கோடி ரூபாய்) மதிப்பிற்கு நம் நாட்டில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 43 சதவீதம் (217 கோடி டாலர்- 9,982 கோடி ரூபாய்) அதிகமாகும்.நடப்பு 2011ம் ஆண்டு, ஜனவரிமுதல் மார்ச் வரையிலான, மூன்று மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு வெகுவாக குறைந்து போயிருந்தது. இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டிற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளில் பல்வேறு, தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த பல நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதும், இந்த முதலீடு அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து அதிகளவில் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.சென்ற ஏப்ரல் மாதத்தில், சிங்கப்பூரிலிருந்து, 117 கோடி டாலர் மதிப்பிற்கு, இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொரீஷியஸ் (97.60 கோடி டாலர்), ஜப்பான் (23.50 கோடி டாலர்), பிரான்ஸ் (22 கோடி டாலர்) மற்றும் சைப்ரஸ் (17 கோடி டாலர்) போன்ற நாடுகளிலிருந்தும் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டை விட, அன்னிய நேரடி முதலீடு மிகவும் விரும்பக்கூடியதாக உள்ளது. ஏனெனில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு என்பது, நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடாகும். இந்த முதலீட்டை, அன்னிய நிதி நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொண்டு விடும்.அதேசமயம், அன்னிய நேரடி முதலீடு என்பது, இந்தியாவில், நிறுவனங்களின் திட்டங்களில் கூட்டாக மேற்கொள்ளப்படும் முதலீடாகும். எனவே, இது, உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக திகழ்கிறது.நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட, 48 சதவீதம் சரிவடைந்திருந்தது.இது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே, 30 சதவீதம் மற்றும் 11 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு 1,940 கோடி டாலராக (89 ஆயிரத்து 240 கோடி ரூபாய்) சரிவடைந்திருந்தது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட 25 சதவீதம் (2,583 கோடி டாலராக- 1 லட்சத்து 18 ஆயிரத்து 818 கோடி ரூபாய்) குறைவாகும். இது, இதற்கு முந்தைய 2008- 09ம் நிதியாண்டில், 2,733 கோடி டாலராக (1 லட்சத்து 25 ஆயிரத்து 718 கோடி ரூபாய்) இருந்தது.நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், சேவைத் துறையில் மிகவும் அதிகமாக 65.80 கோடி டாலர் (3,027 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கட்டுமானத்துறையில் 31.10 கோடி டாலரும், மின் துறையில் 25.60 கோடி டாலரும், கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டுவேர் துறையில் 9.60 கோடி டாலரும், தொலைத் தொடர்பு துறையில், 4.60 கோடி டாலரும், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் 3.80 கோடி டாலரும் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|