பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:57
மும்பை: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீடு, சென்ற மே மாதத்தில், 59 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இம்மாதத்தில், கேமான், டாட்டா ஸ்டீல், ரெலிகேர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், உலகின் பல நாடுகளில் மேற்கொண்ட நேரடி முதலீடு, 370 கோடி டாலராக (17 ஆயிரத்து 20 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.கடந்த 2010 மே மாதத்தில், இந்திய நிறுவனங்களின், வெளிநாட்டு நேரடி முதலீடு, 139 கோடி டாலராக ( 6,394 கோடி ரூபாய்) இருந்தது.இருப்பினும், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் - மே மாதங்களில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட நேரடி முதலீடு, சென்ற ஆண்டின், இதே இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, அதாவது 598 கோடி டாலரிலிருந்து (27 ஆயிரத்து 508 கோடி ரூபாய்), 509 கோடி டாலராக (23 ஆயிரத்து 414 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடு மேம்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடுடன், மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டு கொள்கையில், பல தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்தே, இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீடு நடப்பாண்டு, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாத காலத்தில், 9 சதவீதம் சரிவடைந்துள்ளது. மேற்கண்ட நான்கு மாதங்களில், அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட நேரடி முதலீடு, 651 கோடி டாலராக (29 ஆயிரத்து 946 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே நான்கு மாத காலத்தில், 714 கோடி டாலராக (32 ஆயிரத்து 844 கோடி ரூபாய்) இருந்தது.நடப்பு 2011ல், ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், அன்னிய நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. ஆனால், ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிறுவனங்கள், 312 கோடி டாலரை (14 ஆயிரத்து 352 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன. இது, 2010 ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 43 சதவீதம் (217 கோடி டாலர்- 9,982 கோடி ரூபாய்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|