பதிவு செய்த நாள்
23 ஜூன்2011
16:45
புதுடில்லி : நாட்டின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி மே மாதத்தில் ஏற்றம் பெற்றுள்ளதாக ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010-11ம் நிதியாண்டின் மே மாதத்தில், 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி இருந்ததாகவும், இந்த நிதியாண்டின் மே மாதத்தில், இது 33.5 சதவீதம் அதிகரித்து 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது. வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜெம்ஸ் அண்ட் ஜீவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் தலைவர் ராஜீவ் ஜெயின் கூறியதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளுக்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, இந்திய தயாரிப்புகளுக்கு ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதன்காரணமாக, கடந்த நிதியாண்டைக் காட்டிலும், இந்த நிதியாண்டில் 10 முதல் 15 சதவீதம் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு நாடுகள் ( 30 சதவீதம்) முதலிடத்திலும், அமெரிக்கா (25 சதவீதம்) இரண்டாம் இடத்திலும் மற்றும் ஐரோப்பா ( 20 சதவீதம்) மூன்றாம் இடத்திலும் உள்ளது. கடந்த நிதியாண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும் போது, தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்களின் ஏற்றுமதி 77 சதவீதமும், வெள்ளி நகைகள் 56 சதவீதமும், தங்க நகைகள் 26.5 சதவீதமும் மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைர நகைகளின் ஏற்றுமதி 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களிலேயே, ரத்தினக்கல் மற்றும் ஆபரண நகைகளின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தை ஒப்பிடுகையில் 18.2 சதவீதம் அதிகரித்து 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் பதிவாகி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். மற்ற சர்வதேச நாடுகளிலும், இந்திய தயாரிப்பு நகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதையடுத்து, விரைவில் ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் ஏற்றுமதியை துவக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|