பதிவு செய்த நாள்
04 ஜூலை2011
13:56
சென்னிமலை : ''ஈரோடு மாவட்டத்தில், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும், 36 கோடி ரூபாய் மதிப்புள்ள கைத்தறி போர்வை, பெட்ஷீட், திரைத்துணி, தலையணை உறை, துண்டு ரகங்கள், வரும் அக்டோபர் மாதத்துக்குள் கொள்முதல் செய்யப்படும்,'' என கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார். சென்னிமலை சென்டெக்ஸ், சென்கோப்டெக்ஸ் ஆகிய கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் ஆய்வு செய்தார். அப்போது, நெசவாளர்கள்,'அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை நிலுவையில் உள்ளது. அரசு, சீருடை தயாரிக்க ஆண்டு முழுவதும் ஆர்டர் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகை நிலுவை போன்றவற்றை வழங்க வேண்டும்' என்று கோரினர். நிருபர்களிடம் இயக்குனர் உமாசங்கர் கூறியதாவது: பிரதம சங்கங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களுக்கு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க, கோ- ஆப்டெக்ஸ் துவங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிரதம நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை விற்பனை செய்ய ஏதுவாக, இந்தியா முழுவதும், 200 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வரை கைத்தறி துணி ரகங்கள் விற்பனையாகின்றன. வரும் காலங்களில், ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தற்போதுள்ள விற்பனை நிலையங்களில், 51 மையங்களை நவீன மயமாக்க உள்ளோம். நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆண்டு முழுவதும் சீருடை துணிகள் தயாரிக்க, கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு, 600 கோடி ரூபாய்க்கு இலவச வேட்டி, சேலை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், பல மாதமாக விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும், 36 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி போர்வை, பெட்ஷீட், திரைத்துணி, தலையணை உறை, துண்டு ரகங்கள், வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும். தற்போது, கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களுக்கு ஜவுளி கொள்முதல் செய்த ஒரு வாரத்தில், பணம் பட்டுவாடா செய்ய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு உமாசங்கர் கூறினார். ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் குமாரவேல், கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர்கள் ஆறுமுகம், சங்கரலிங்கம், ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|