பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
04:12
புதுடில்லி:சென்ற 2010-11ம் (ஜூலை-ஜூன்) பயிர் பருவத்தில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி 24.10 கோடி டன் என்ற அளவை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இந்த சாதனைக்காக விவசாயிகளை பாராட்டிய அவர், எதிர்காலஉணவு தானியங்களின் தேவையைசமாளிக்க, நாடு இரண்டாவது பசுமைப் புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.டில்லியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், 2010-11ம் பயிர் பருவத்தில், உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கிய 5 மாநிலங்களுக்கு 'கிரிஷி கர்மான்' விருதுகளை வழங்கி பாராட்டினார். பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் பேசிய பிரதமர், 'சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2010-11ம் பயிர் பருவத்தில், கோதுமை, சோளம்,பருப்பு வகைகள் உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி 24.10 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டியுள்ளது' என்று தெரிவித்தார்.அவர் மேலும் பேசியதாவது:நாடு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் புதிய சாதனை படைத்துள்ளது. மத்திய வேளாண் அமைச்சகம், அதன் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவித்ததை விட, கூடுதலாக 50 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2009-10ம் பயிர் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட இது அதிகமாகும். உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளதற்கு காரணமான விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இந்த வளர்ச்சி இதோடு நின்று விடாமல், தொடர வேண்டும்.வரும் 2020-21ம் ஆண்டில், நாட்டின் உணவு தானியங்களுக்கான தேவை 28.10 கோடி டன் என்ற அளவை எட்டும். இந்த தேவையை சமாளிக்க, உணவு தானியங்கள் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, செயல்பட வேண்டும். உணவு தானியங்கள் உற்பத்தி, ஆண்டிற்கு 2 ய்தவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டால்தான், அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் உணவு தானியங்களுக்கான தேவையை சமாளிக்க முடியும்.இத்தகைய வளர்ச்சிக்கு,வேளாண்துறையில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்துறையின் பங்களிப்பில், விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 0.6 சதவீதம் செலவிடப்படுகிறது. உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண்துறையில் ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இத்தகைய ஆராய்ச்சிக்காக, தற்போது ஒதுக்கப்படுவதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.வேளாண்துறையின் மேம்பாட்டிற்கு, புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவது அவசியமாகும். வேளாண் பொருள்கள் உற்பத்தியில், இத்தகைய தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.இந்திய வேளாண்துறை, பெரும்பாலும் பருவமழையை நம்பி உள்ளது. அதனால், உடனடியாக பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்துறைக்கு பாசன வசதியின் பங்களிப்பை தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.நாட்டின் வேளாண்துறைக்கு, பருவ நிலை மாற்றம் மிகுந்த சவால் விடுக்கும் பிரச்னையாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், பயிர் வகைகளை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தவாறு, பயிர் செய்யும் முறைகளிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதே சமயம், மிகுந்த எச்சரிக்கையுடன் உயிரித் தொழில்நுட்பத்திலான பயிர் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருவாயை பெருக்க வேண்டும்.கடந்த பத்தாண்டு காலத்தில் (1997-98 முதல் 2006-07 வரை) நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில் சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, எதிர்வரும் காலத்தில் நம் முன் உள்ள சவாலை உணர்த்துவதாக உள்ளது.வேளாண் விஞ்ஞானிகளுக்கு முக்கிய வாடிக்கையாளராக விவசாயிகள் விளங்குகின்றனர். எனவே, அவர்களிடமிருந்து தான், ஆராய்ச்சி தொடர்பான கேள்விகளை வேளாண் விஞ்ஞானிகள் பெற வேண்டும். அவர்களுக்கு, வரும் ஆண்டுகளில் இது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|