பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
10:13
சேலம் : 'ஜவுளித் துணிகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு அறிவிப்பில், ஜவுளித் துணிகளுக்கு, 5 சதவீதம் வாட் விற்பனை வரி விதிக்கப்பட்டிருப்பதால், விசைத்தறி துறையினர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இதற்கு உபயோகப்படுத்தப்படும் கோன் நூலுக்கு, ஏற்கனவே விற்பனை வரி விதிக்கப்பட்டு விடுகிறது. தற்போதைய அரசு அறிவிப்பில், 5 சதவீதம் வாட் வரி, ஜவுளித் துணி மேல் விதித்திருப்பதன் மூலம், நஷ்டத்தில் இருக்கும் விசைத்தறி தொழிலுக்கு, மேலும் பெரிய பாதிப்பு ஏற்படும். விசைத்தறி துறையில், 90 சதவீத்துக்கு மேல் உள்ள தொழிற்சாலைகள், அமைப்பு சாரா தொழிலாக இயங்கி வருகின்றன. அதில், 70 சதவீதத்துக்கு மேலுள்ள தொழிற்சாலைகளே, மிகக்குறைந்த அளவில் இயங்கி வருகின்றன. நூலை விற்கும் பருத்தி மில்கள், அமைப்பு சார்ந்த தொழிலாக இருப்பதால், அங்கு நூலுக்கு வரி விதிப்பது எளிதாகிறது. அந்த நூலை வாங்கி, துணி தயார் செய்து விற்கும் சிறிய விசைத்தறி கூடங்களால், விற்பனை வரி நிர்வாகத்தை செய்வது முடியாத காரியம். ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும், வீட்டு உபயோக துணி தயாரிப்பவர்களுக்கும் அனுப்பப்பட்டு, மூன்றாவது அல்லது நான்காவது நபர் மூலமாகத்தான், விற்பனைக்கோ, ஏற்றுமதிக்கோ அனுப்பப்படுகிறது. இதனால், ஏற்றுமதி செய்ய துணிகளுக்கு செலுத்திய விற்பனை வரியை திரும்பப் பெற இயலாது. இப்பிரச்னைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனமாக பரிசீலித்து, துணிகளுக்கு விதிக்கப்பட்ட விற்பனை வரியை விலக்க வேண்டும். விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிப்பதால், அரசாங்கத்துக்கு அதிகமான வருவாய் இழப்பு ஏற்படாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|