பதிவு செய்த நாள்
19 ஜூலை2011
02:36
சேலம்:விண்ணை தொடும் அளவுக்கு மாட்டு தீவனம் விலை உயர்ந்துள்ளது. இதனால், பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையுடன் தீவனத்தின் விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. மத்திய, மாநில அரசு விலைவாசியை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல், தொடர் அலட்சியம் காட்டி வருகின்றன. பொதுமக்களின் அன்றாட உணவு தேவைக்கு பயன்படும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட பொருட்களின் விலை, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. பால் உற்பத்திக்கு இன்றியமையாத மாட்டு தீவனங்களின் விலை உயர்ந்துள்ள தால், உற்பத்தியாளர்கள் பெரும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு, 22 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும் பாலை கொள்முதல் செய்து வருகின்றன. கடலை புண்ணாக்கு, சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்ட மாட்டு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாட்டு தீவனங்களை பல தனியார் நிறுவனங்கள் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. ஒரு கிலோ மாட்டு தீவனம் 12.50க்கும், 70 கிலோ எடை கொண்ட மூட்டை, 875 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாட்டு தீவனம் கிலோவுக்கு, 1.50 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டது. மாட்டு தீவனம் கிலோ, 11 ரூபாய்க்கும், மூட்டை 770 ரூபாய்க்கும் விற்று வந்த நிலையில், மூட்டைக்கு, 105 ரூபாய் வரை விலை ஏற்றம் அடைந் துள்ளது. சோளத்தட்டு ஒரு கட்டு, 100 ரூபாய்க்கு விற்று வந்தது. இது, தற்போது 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. வைக்கோல் கட்டு, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை புண்ணாக்கு கடந்த ஒரு சில நாள்களில் மூட்டைக்கு, இரண்டு ரூபாய் வரை விலை ஏறியுள்ளது.மாட்டு தீவனங் களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாட்டு தீவனங்களுக்கான பசும்புல் வளர்ப்பில் ஈடுபடும் தொழிலாளிகளின் கூலியும் கடுமையாக உயர்ந்துள்ளது. விண்ணை தொட்ட மாட்டு தீவனத்தின் விலையை, அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ராஜேந்திரன் கூறியதாவது: மாட்டு தீவனம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், மாநில அரசு கலப்பு தீவனங்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மானிய விலையில் வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேணடும். ஆந்திராவில், தனியார் நிறுவனத்திடம், மாட்டு தீவனத்தை, ஒரு கிலோ, 11 ரூபாய்க்கு வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு அம்மாநில அரசு வழங்கி வருகிறது. ஆவினம் மூலம் கலப்பு தீவனம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது, நடைமுறை சிக்கலால், மூன்று ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது.தமிழ்நாடு கால்நடை துறை, மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, மாட்டுக்கு,400 கிராம் மாட்டு தீவனம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு, 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் நிலையில், எட்டு லட்சம் கிலோ தீவனம் தேவைப்படுகிறது. எனவே, அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாட்டு தீவனங்களை வாங்கி, பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|