பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:11
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூன் 31ம் தேதி வரையிலான, மூன்று மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகள், 14.66 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 5.22 சதவீதம் (13.93 கோடி டன்) அதிகமாகும்.உலகின் பல முன்னணி நாடுகளின் பொருளாதார சுணக்க நிலையால், இந்திய துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்தில், மந்தநிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இக்காலாண்டில், கையாளப்பட்ட சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலக்கரி இறக்குமதி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மசகு எண்ணெய் வகைகள் இறக்குமதியும், 10 சதவீதம் உயர்ந்துள்ளது.அதேசமயம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இரும்புத் தாது ஏற்றுமதி மற்றும் ரசாயன உரங்கள் இறக்குமதி குறைந்ததையடுத்து, ஒரு சில முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட உரங்கள், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 42 சதவீதம் சரிவடைந்து அதாவது, 31.57 லட்சம் டன்னிலிருந்து, 18.15 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று கையாளப்பட்ட இரும்புத் தாதுவின் அளவும், 2.28 கோடி டன்னிலிருந்து, 1.94 கோடி டன்னாக குறைந்துள்ளது. சென்னை, கொச்சி, மர்மகோவா மற்றும் மும்பை ஆகிய நான்கு பெரிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னை துறைமுகத்தில் இரும்புத் தாது கையாளும் அளவு குறைந்ததையடுத்து, இத்துறைமுகத்தின் ஒட்டு மொத்த சரக்குகள் கையாண்ட அளவு 2.98 சதவீதம் குறைந்து, 1.56 கோடி டன்னிலிருந்து, 1.51 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், சென்னை துறைமுகம் 15.66 லட்சம் டன் இரும்புத் தாதுவை கையாண்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில், இத்துறைமுகம் கையாண்ட இரும்புத் தாதுவின் அளவு, 29 ஆயிரம் டன்னாக மிகவும் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து, மிக அதிகளவில் இரும்புத் தாது, சென்னை துறைமுகத்தின் வாயிலாக, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இரும்புத் தாது வெட்டியெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இத்துறைமுகத்தின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தடை தொடர்ந்து நீடிப்பதால், இனி வரும் மாதங்களிலும், இரும்புத் தாது ஏற்றுமதியில், பாதிப்பு இருக் குமென துறைமுக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இதே காலத்தில், எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 37 சதவீதம் அதிகரித்து, 22.62 லட்சம் டன்னிலிருந்து, 30.99 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவும், 18.02 சதவீதம் அதிகரித்து, 59.37 லட்சம் டன்னிலிருந்து, 70.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 18.57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.57 கோடி டன்னிலிருந்து, 1.86 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு, 4.51 சதவீதம் குறைந்து, 1.42 கோடி டன்னிலிருந்து, 1.36 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.சர்வதேச அளவில் சரக்குகளை கையாள்வதற்கான Œரக்குக் கட்டணமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக, ஒரு டன் சரக்கை கையாள்வதற்கான கட்டணம் 415-500 டாலர் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 550-620 டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|