பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
10:31
திருவனந்தபுரம் : கேரளாவில் ஐந்தாண்டுகளில் மதுபான விற்பனை, 23 ஆயிரத்து 714 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. கேரளாவில் மதுபானங்களை விற்பனை செய்வதற்காக, கேரள அரசு மதுபான கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கழகத்தின் சார்பில், மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளில், 338 சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர கடந்தாண்டு மட்டும் மாநிலத்தில் 152 மதுபான பார்கள் செயல்படவும், இடதுசாரி முன்னணி ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மாநிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு மதுபான விற்பனை உயர்ந்து வருகிறது. இதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், மாநிலத்தில் இக்கழகம் மூலம் 23, 713 கோடியே 93 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 350 கோடியே 29 லட்சம் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பீரும், 857 கோடியே 29 லட்சம் பெட்டிகளில் அடைக்கப்பட்ட, பிற வகை மதுபானங்களும் விற்பனையாகி உள்ளன. மேலும், ஐந்தாண்டுகளில் புதிதாக 57 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் 33 சில்லறை விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பல்வேறு காரணங்களால் துவங்கப்படவில்லை. ஆனால், புதிய ஆட்சி பதவிக்கு வந்ததும், புதிதாக துவக்கப்பட்ட 33 விற்பனை நிலையங்களில் 15 கடைகளுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டது. கடந்த ஆட்சியில் மாநிலத்தில் 152 மதுபான பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி முடிவுறும் நிலையில், அரசு மதுபான கழகத்தின் விற்பனை 196 கோடியே 75 லட்சம் ரூபாயாக இருந்தது. புதிய தலைமுறை இளைஞர்கள், மதுபானத்திற்கு அடிமையாகி வருவது அரசுக்கு பெரும் கவலையை உருவாக்கி உள்ளது. இதை தடுக்க, கல்வி நிலையங்களில் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த கிளப்புகள் துவங்கப்படும். இவ்வாறு, கேரள சட்டசபையில் நடந்து வரும் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பாபு தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|