பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
02:44
நடப்பு வாரத்தில், பங்கு வர்த்தகம், ஒட்டு மொத்த அளவில் நன்றாகவே இருந்தது. கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு, ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியம் உடன்பாடு, பல நிறுவனங்களின் சாதகமான நிதி நிலை முடிவுகள் போன்ற பல சிறப்பு அம்சங்களால், நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது.வெள்ளிக்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 286 புள்ளிகள் அதிகரித்து, 18,722 புள்ளிகளிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 92 புள்ளிகள் உயர்ந்து 5,633 புள்ளிகளிலும் நிலைகொண்டன. திங்கள் முதல் வெள்ளி வரை யிலான, 5 வர்த்தக தினங்களில், 'சென்செக்ஸ்' 215 புள்ளிகளும், 'நிப்டி' 67 புள்ளிகளும்உயர்ந்திருந்தன. வெள்ளி யன்று ஏன் இவ்வளவு கூடியது: கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், உதவிகரம் நீட்டின. இந் நிலையில்,ஆக்சிஸ் பேங்கின் காலாண்டு முடிவுகள், சந்தை மதிப்பீட்டிற்கும் அதிகமாக இருந்தது. இது போன்ற, பல காரணங்களால், பங்கு வர்த்தகம் வெள்ளிக்கிழமையன்று ஏற்றம் கண்டது.ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியம்: ரிலையன்ஸ் நிறுவனத்தின், 21 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் 30 சதவீத அளவிற்கு முதலீடு செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மதிப்பு 720 கோடி டாலராகும். கடந்த ஒரு சில மாதங்களாக, நிலுவையில் இருந்த இத்திட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம், பிரிட்டிஷ் பெட் ரோலியம் நிறுவனத்தின் அனுபவமும், ஆலோசனையும் இத்திட்டத்திற்கு கிடைக்கும்.பன்முக சில்லரை வர்த்தகம்: இந்தியாவில் பன்முக 'பிராண்டு' சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு 51 சதவீத அளவிற்கு இருக்கலாம் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பன்முக சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நிறுவனங்கள் முதலீடு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இரட்டை லாபம் கிடைக்கும். மேலும், இந்நிறுவனம், திங்களன்று காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளது. இதனால், வரும் வாரங்களில், இதன் பங்கின் விலை உயரலாம்.விமான சேவை நிறுவனங்கள்: இந்தியாவில் செயல்படும், விமான சேவை நிறுவனங்களுக்கு, இது ஒரு சோதனை காலம் தான். இத்துறையில், ஒரு சில நிறுவனங்களே லாபம் ஈட்டுகின்றன. இவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறிது லாபம் ஈட்டியிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில், 123 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமான சேவை நிறுவ னங்களுக்கிடையே கடுமையான போட்டி உள்ள போதிலும், பயணிகள், அதிக தொகை கொடுத்துதான் விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. காலாண்டு முடிவுகள்: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், இந்தியாபுல்ஸ், தெர்மேக்ஸ், என்.ஐ.ஐ.டி., அலகாபாத் பேங்க், இந்துஸ்தான் ஜிங்க் ஆகிய நிறுவனங்களின் லாபம் கூடியுள்ளது. அதேசமயம்,கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ், யூனியன் பேங்க், கோல்கேட்-பாமாலிவ் ஆகிய நிறுவ னங்களின் லாபம் குறைந்துள்ளது.கட்டுமான துறையில், ஒரு சில நிறுவனங்களின் லாபம் உயர்ந்தும், ஒரு சில நிறுவனங் களின் லாபம் குறைந்தும் உள்ளது. உரத்துறை நிறுவனங்களின் லாபம் உயர்ந்துள்ளது. மழை சிறப்பாக இருக்கும் நிலையில், வரும் காலாண்டுகளிலும், இவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும்.ரூபாயின் மதிப்பு கூடுவது ஏன்? பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக, இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 44.35 ரூபாயாக வலுவடைந்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பும் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீடு உயர்ந்து வருவதும், ஏற்றுமதி அதிகரித்து வருவதும், செலாவணி வரத்து உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம்.இதனால், ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. என்ன பங்கு வாங்கலாம்? பெட்ரோநெட் எல் என். ஜி, என்.ஐ.ஐ.டி., அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ராலிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கி வைக்கலாம். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே, இதை வாங்கிவைத்தால், லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய பங்கு வெளியீடுகள்: எல் அண்டு டி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும் 27ம் தேதி தொடங்கி, 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் மூலம், 1,250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பங்கு ஒன்று 51-59 ரூபாய் என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பங்கு வெளியீட்டிற்கு, கேர் / கிரிசில் ஆகிய நிறுவனங்கள், 5 க்கு 5 என்ற வகையில் தர குறியீடு வழங்கியுள்ளன. எனவே, இதன் பங்கு வெளியீட்டில் பங்கேற்கலாம். வரும் வாரம் எப்படி இருக்கும்? ரிலையன்ஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியம் உடன்பாட்டால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயரும். பன்முக பிராண்டு சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நிறுவனங்களின் முதலீடு 51 சதவீதம் இருக்கலாம் என்ற செய்தியும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்க்கும். - சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|