பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
00:04
சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பீ), சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 4,331.77 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 2,882.38 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 463.90 கோடியிலிருந்து, 802.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.நரேந்திரா தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, வழங்கப்படும் கடன்கள் மற்றும் இதர ஒதுக்கீடுகளுக்காக, 544.95 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 205.58 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 200.44 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய், 2,667.52 கோடியிலிருந்து, 3,992.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வட்டி அல்லாத இதர இனங்கள் வாயிலான வருவாய், 214.86 கோடியிலிருந்து, 339.19 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வட்டி செலவினம், 1,761.26 கோடியிலிருந்து, 2,804.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து நிகர வட்டி வருவாய், 906.26 கோடியிலிருந்து, 1,187.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஜூன் மாதம் 30 ம் தேதி வரையிலும், வங்கியின் மொத்த வர்த்தகம், 40.49 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 92 ஆயிரத்து 412 கோடியிலிருந்து, 2 லட்சத்து 70 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், திரட்டப்பட்ட டிபாசிட் 38.11 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 9 ஆயிரத்து 461 கோடியிலிருந்து, 1 லட்சத்து 51 ஆயிரத்து 173 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள், 43.64 சதவீதம் அதிகரித்து, 82 ஆயிரத்து 951 கோடியிலிருந்து, 1 லட்சத்து 19 ஆயிரத்து 148 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நரேந்திரா மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|