பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
00:04
சென்னை:பரஸ்பர நிதித் திட்டத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வோருக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,'செபி' முடிவு செய்துள்ளது.பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், 'செபி' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், பங்கு சார்ந்த யூலிப் திட்டங்களின் முதலீட்டு காலம் 3-5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளால், பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.அதே சமயம், பரஸ்பர நிதி நிறுவனங்களின் வருவாய் குறைந்தது. இதனால், இந்நிறுவனங்கள், பரஸ்பர நிதித் திட்ட முகவர்களுக்கான தரகு கட்டணத்தைக் குறைத்தன. இத்தகைய நடவடிக்கை காரணமாக, முதலீடுகளை ஈர்ப்பதில் முகவர்களுக்கு ஆர்வம் குறைந்து போனது. இதனால், பரஸ்பர நிதி நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இத்துறை நிறுவனங்கள்,'செபி' அமைப்பிடம் முறையிட்டன.இதைத் தொடர்ந்து, பரஸ்பர நிதித் துறையின் வளர்ச்சிக்காக, 'செபி' பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது குறித்து,'செபி' வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வோர், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்வோர், பரிமாற்றக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எனினும், புதிதாக பரஸ்பர நிதி திட்ட கணக்கை தொடங்குவோர், ஒரு முறை கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறித்து, மேலும் வெளிப்படையான தகவல்களை அளிக்க வேண்டும் என்று,'செபி'யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவை நிர்வகிக்கும் சொத்து மதிப்புடன், கடன் பத்திரங்கள், பங்குகள் மற்றும் இரண்டும் இணைந்த பேலன்ஸ்டு பண்டு திட்டங்களின் லாப விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.பரஸ்பர நிதி நிறுவனங்கள் அவற்றின் பரஸ்பர நிதித் திட்டங்கள் குறித்த, சொந்த தர மதிப்பீட்டை வெளியிட்டு வருகின்றன. இனி, இந்நிறுவனங்கள், பங்கு சார்ந்த திட்டங்களுக்கு,'சென்செக்ஸ்' அல்லது 'நிப்டி' ஆகிய பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதே போன்று, கடன் பத்திர முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை, அர” கடன் பத்திரங்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிவிக்க வேண்டும்.இத்தகைய நடைமுறையால், முதலீட்டாளர்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள பரஸ்பர முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், இதர முதலீடுகளுக்கு உள்ள வேறுபாடுகள் குறித்தும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இத்துடன், முதலீட்டாளர் நலன் கருதி, 'செபி' மேலும் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒருவர், தாம் முதலீடு செய்துள்ள பரஸ்பர நிதி திட்டங்களில், ஒரு மாதத்தில் ஏதாவது ஒன்றில் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்தாலும், அது குறித்த விவரங்களை உள்ளடக்கிய மாதாந்திர அறிக்கையை பரஸ்பர நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும். முகவருக்கு வழங்கப்பட்ட பரிவர்த்தனை கட்டண விவரமும் அதில் இடம்பெற வேண்டும். அது மட்டுமின்றி, ஒருவர் தமது முதலீட்டு தொகுப்பில் உள்ள எந்தவொரு திட்டத்திலும், பரிவர்த்தனை மேற்கொள்ளாத போதிலும், அந்த விவரங்களைக் கூட, அரையாண்டிற்கு ஒருமுறை வாடிக்கையாளருக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று, 'செபி' உத்தரவிட்டுள்ளது.மேலும், பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதை எளிதாக்கும் நோக்கில், 'வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' (கே.ஒய்.சி.,) நடைமுறையில், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை ஈடுபடுத்தவும்,'செபி' திட்டமிட்டுள்ளது.இந்த நடைமுறையில், 'ஆதார்' தேசிய அடையாள எண் அட்டையை சான்று ஆவணமாக எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு தழுவிய அளவில், முதலீட்டாளர் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பை பெறவும், புதிய விவரங்களை உடனுக்குடன் மேம்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|