பதிவு செய்த நாள்
07 ஆக2011
00:05
புதுடில்லி: நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 15.50 கோடி டாலராக (713 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 12 கோடி டாலராக (552 கோடி ரூபாய்) இருந்தது. ஆக, இதன் ஏற்றுமதி 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இந்திய கைவினைப் பொருள்களுக்கு, மேற்காசிய சந்தையில் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக, கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்திய கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. தற்போது, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்திய கைவினைப் பொருள்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது என கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி 20.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 71.10 கோடி டாலராக (3,271 கோடி ரூபாய்) உள்ளது. இதில், மரவேலைப்பாடுகள் நிறைந்த கைவினைப் பொருள்களின் பங்களிப்பு 52.8 சதவீதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, சால்வைகள் (49 சதவீதம்), கவரிங் நகைகள் (42 சதவீதம்) மற்றும் இதர கைவினைப் பொருள்கள் ( 32 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.சென்ற 2010-11ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, 230 கோடி டாலராக (10 ஆயிரத்து 580 கோடி ரூபாய்) இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகமாகும்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி 270 கோடி டாலர் (12 ஆயிரத்து 420 கோடி ரூபாய்) அளவிற்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக மேம்பாட்டு கவுன்சில் மேலும் கூறியுள்ளது. மொராதாபாத், ஜெய்ப்பூர், ஷாகாரன்பூர், ஜோத்பூர் மற்றும் நர்சாபூர் ஆகியவை கைவினைப் பொருள்களின் முக்கிய உற்பத்தி மண்டலங்களாக விளங்குகின்றன. மேலும், இத்துறையின் வாயிலாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|