பதிவு செய்த நாள்
09 ஆக2011
00:08
சென்னை,: மஞ்சள் விலை, கடந்த ஆண்டை விட 150 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதால், இப்பயிரை அதிகளவில் பயிரிடும் தமிழகம் மற்றும் ஆந்திர விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நடப்பாண்டில் மஞ்சள் சாகுபடியில் அவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. நம் நாட்டின் சடங்கு, சம்பிரதாயங்கள் மற்றும் பாரம்பரிய கலாசாரத்தில் மஞ்சள் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகிறது. சர்வரோக நிவாரணி என்ற சிறப்புத் தன்மை கொண்ட மஞ்சள், சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும், அலோபதி மருந்துகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜவுளி,ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இதன் பங்களிப்பு அதிகம் உள்ளது.உலகளவில், மஞ்சள் பயிரிடுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நம்நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மஞ்சள் உற்பத்தியில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் பங்களிப்பு 76 சதவீதமாக உள்ளது. சர்வதேச மஞ்சள் உற்பத்தி, ஆண்டுக்கு 11-11.5 லட்சம் டன் என்ற அளவிற்கு உள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு 78 சதவீதமாகவும், மொத்த வர்த்தகத்தில் 60 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 3,000 ரூபாய் வரை, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், 2007ம் ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 1,800 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. இந்தியா, 2008-09ம் நிதியாண்டில் 248.58 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 52ஆயிரத்து 500 டன் மஞ்சளை ஏற்றுமதி செய்து புதிய சாதனை அளவை எட்டியது. மஞ்சள் விலை குறைந்ததால், அதனை பயிரிடுவதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்தது. இதனால், மஞ்சள் உற்பத்தி 8.5 - 9 லட்சம் டன் என்ற அளவில் இருந்து, 7.5-7.7 லட்சம் டன்னாக குறைந்தது. உற்பத்தி குறைந்தால், மஞ்சள் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளில், மஞ்சள் விலை படிப் படியாக அதிகரித்து, 2010ம் ஆண்டு, ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 16 ஆயிரம் ரூபாயை எட்டியது. சராசரியாக மஞ்சள் விலை 200 சதவீத அளவிற்கு உயர்ந்ததையடுத்து, உற்சாகமடைந்த விவசாயிகள், அதிக அளவில் மஞ்சளை பயிரிடத் தொடங்கினர். தேசிய அளவில் மஞ்சள் பயிரிடும் பரப்பு 25 சதவீதம் அதிகரித்தது. தமிழகத்தில் மஞ்சள் பயிரிடும் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. நடப்பு சந்தைப் பருவத்தில் மஞ்சள் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்து 70 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை -70 கிலோ) உயர்ந்தது. இது, சென்ற ஆண்டு 48 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் இருந்தது. உற்பத்தி பெருகியதையடுத்து சென்ற ஆண்டு 7 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் இருந்த மஞ்சள் இருப்பு, நடப்பு பருவத்தில் 11 லட்சம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது. பொதுவாக, சந்தையில் மஞ்சள் வரத்து ஜனவரியில் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இதன்படி, நடப்பாண்டு மஞ்சள் உற்பத்தி அதிகரித்து, இருப்பும் உயர்ந்திருந்ததால் சந்தையில் விலை சரியத் தொடங்கியது. ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 7,000 -7,300 ரூபாயாக குறைந்தது. மேலும், சென்ற ஆண்டு டிசம்பரில், பருவம் தவறிய மழையால், மஞ்சளின் தரம் குறைந்தது. இதனால், மஞ்சள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 7,000 ரூபாய்கும் குறைவாக விலை போய் கொண்டுள்ளது. மஞ்சள் விலை உயர்வால் மகிழ்ச்சியடைந்து, அதிக அளவில் இதனை பயிரிட்ட விவசாயிகள், தற்போது விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் பயிரிடும் பரப்பை குறைத்துக் கொண்டுள்ளனர். மஞ்சளுக்கான தேவை, கையிருப்பு ஆகியவற்றை கணக்கிடுகையில், அதன் விலை உயர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனினும், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 6,000 ரூபாய்க்கும் கீழ் சரியாது என்று இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|